பக்கத்து கிராமத்தில்.. குப்பை கொட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்.. கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்
கோவா: பக்கத்து ஊரில் குப்பைகளை கொட்டியதற்காக அபராதம் கட்டியிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா.
Recommended Video
'மேட்ச் ஃபிக்ஸிங்' என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட்டு பார்த்தால், ஜடேஜா இந்திய அணிக்கு கிடைத்த முக்கியமான வீரர்களில் ஒருவர் எனலாம்.
ஃபீல்டிங்கில் அப்போதே கில்லி. பேட்டிங்கும் அவ்வப்போது அமர்க்களமாக இருக்கும். ஜடேஜா எனும் பெயரை இந்திய அணியின் ஒரு பிராண்ட் ஆக்கியவர்.

சினிமாவில் ஆர்வம்
மேட்ச் பிக்ஸிங் புகாருக்கு பிறகு, கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தவர், பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 2003-ல் வெளியான 'கேல்' என்ற பாலிவுட் படத்தில் சன்னி தியோல் - சுனில் ஷெட்டி ஆகியோருடன் நடித்திருந்தார். பிறகு, 'பல் பல் தில்கே சாத்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த 'கை போ ச்சே' படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

குப்பை கொட்டிய ஜடேஜா
இந்நிலையில், வடக்கு கோவாவின் அழகிய ஆல்டோனா கிராமத்தில் பங்களா வைத்திருக்கும் அஜய் ஜடேஜாவுக்கு, பக்கத்து கிராமமான நாச்சினோலாவில் குப்பைகளை கொட்டியிருக்கிறார். இதனால், அவருக்கு ரூ .5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் துருபி பந்தோட்கர் தெரிவித்துள்ளார். 90-களின் இந்த பிரபல கிரிக்கெட் வீரர் எந்தவிதமான பிரச்சனையும் மேற்கொள்ளாமல் அபராதம் செலுத்தியதாக பந்தோட்கர் கூறியுள்ளார்.

கொட்டுபவர்களை கண்டுபிடிக்க
இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் குப்பை பிரச்சனையால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். வெளியில் இருந்தும் குப்பைகள் கிராமத்தில் கொட்டப்படுகின்றன, எனவே குப்பைப் பைகளை சேகரித்து குப்பை கொட்டுபவர்களை அடையாளம் காண சில இளைஞர்களை நியமித்தோம். அப்போது, அஜய் ஜடேஜா என்ற பெயரில் சில பைகளில் குப்பைகளை நாங்கள் கண்டுபிடித்தோம்.

5,000 அபராதம்
இதையடுத்து, நேரடியாக அவரிடம் சென்று, 'எதிர்காலத்தில் குப்பைகளை கிராமத்தில் கொட்ட வேண்டாம்' என்று நாங்கள் அவருக்கு கூறிய போது, அபராதத்தை செலுத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார். பிறகு ரூ. 5,000 அபராதத்தை அவர் செலுத்தினார். அத்தகைய பிரபலமான கிரிக்கெட் வீரர் எங்கள் கிராமத்தில் தங்கியிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், ஆனால் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்தவர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார். தவறே செய்தாலும், நம்ம மக்கள் பிரபலங்களை ரசிக்கவே செய்கிறார்கள். அதை சாதகமாக எடுத்துக் கொண்டு அந்த பிரபலங்கள் எல்லை மீறுவதை இனிமேலாவது நிறுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications