கிரிக்கெட்டுக்குள் நுழைந்த கதை
அஜீத் வடேகர் கிரிக்கெட் உலகத்துக்குள் எப்படி நுழைந்தார் என சொல்லப்படும் ஒரு கதை உண்டு. ஒருநாள் கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது, மற்றொரு மூத்த மாணவர் கிரிக்கெட் "அணியில் பனிரெண்டாவது நபராக அணியில் ஒரு ஆள் வேண்டும். அமர்ந்து கொண்டு இருந்தால் போதும். விளையாட வேண்டாம்" என்று இவரிடம் கேட்டிருக்கிறார். விளையாட வேண்டாம் என்றால் தான் வருவதாக வடேகர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். ஆனால், அதன் பின் கிரிக்கெட் ஆடி இந்தியாவின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராக அஜீத் வடேகர் மாறியது வரலாறு.
ஒரு பேட்ஸ்மேனாக.....
சுமார் பதினேழு ஆண்டுகள் முதல் தர கிரிக்கெட் ஆடித்தீர்த்த வடேகர் 237 போட்டிகளில், 15,380 ரன்கள் குவித்துள்ளார். அதில் 36 சதம், 84 அரைசதம் அடங்கும். மேலும், முதல் தர போட்டிகளில் 271 கேட்ச்கள் பிடித்திருக்கிறார். இந்திய அணிக்காக இவர் ஆடியது மிகவும் குறைவான போட்டிகளே. 37 டெஸ்ட் போட்டிகளில் 2113 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஒரு சதம், மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும்.
பேட்டிங் திறமை
இவரது பேட்டிங்கை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. காரணம், இவர் எடுத்த ரன்களை குறிப்பிட்ட வகையில் எத்தனை பேர் எடுத்திருக்கிறார்கள் என பார்த்தாலே புரியும். இடது கை பேட்ஸ்மேனான வடேகர் தவிர்த்து, இதுவரை கங்குலி, கம்பீர் மற்றும் தவான் மட்டுமே இந்தியா சார்பாக 2000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அதே போல, இவர் மூன்றாவது பேட்ஸ்மேனாக 1,889 ரன்கள் குவித்துள்ளார். டிராவிட், மொஹிந்தர் அமர்நாத், வெங்சர்க்கார், புஜாரா மட்டுமே மூன்றாவது இடத்தில் களமிறங்கி இவரை விட அதிகம் ரன் குவித்த வீரர்கள்.
ஒரு கேப்டனாக.....
1971ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்ட அஜீத் வடேகர், மிக சில போட்டிகளே ஆடியிருந்தார். அதிக அனுபவமில்லாத சூழலில் கேப்டனாக, ஒரே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மண்ணில் அந்த அணிகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தினார் இவர். அயல்நாட்டில் இந்திய அணி சாதிக்கும் என்பதை அனைவரும் அறியச் செய்தார்.
சில ஆண்டுகளே நீடித்த பெருமை
எனினும், அடுத்து 1974ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், இந்திய அணி தோல்வி அடைந்தது. தொடர்ந்து அஜீத் வடேகர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து, வடேகர் அனைத்து கிரிக்கெட்களிலும் இருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர், அசாருதீன் கேப்டனாக இருந்த போது சில காலம் அணியின் மேனேஜராக இருந்தார். பின், அணித் தேர்வாளராகவும் பணியாற்றினார். இந்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது (1967), பத்மஸ்ரீ விருது (1972) உள்ளிட்ட பெருமைகளை அளித்துள்ளது.