
டோணியின் அணி
இந்திய அணியின் கேப்டனாக டோணி பதவியேற்றவுடன் அணியில் கொஞ்சம் கொஞ்சமாக சீனியர் பிளேயர்கள் கழட்டிவிடப்பட்டனர். டோணி தன்னுடைய பேச்சை கேட்கும் திறமையான வீரர்களை தேடி தேடி பிடித்து அணியில் சேர்த்தார். சேவாக், கம்பிர், லக்ஷ்மன், ஹர்பஜன், சாகிர் கான் என ஒரே செட் அப்படியே அணியைவிட்டு சென்றது. பொதுவாக புதிதாக அணியில் கேப்டனாக மாறும் எல்லோரும் செய்யக்கூடிய செயலைத்தான் டோணி செய்தார். இப்போது ரெய்னா, அஸ்வினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கோஹ்லியும் அதைத்தான் செய்கிறார். ஆனால் டோணி அப்போது செய்தது இப்போது அவருக்கு பிரச்சனை ஆகி இருக்கிறது.

அணியில் இருக்க கூடாது
டோணிக்கு எதிராக முதலில் கருத்து சொன்னது விவிஎஸ் லக்ஷ்மன் தான். இவர் தான் கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டோணி விளையாட கூடாது என்றார். மேலும் இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்ற போது, அந்த போட்டியில் ஒழுங்காக ஆடி இருந்தாலும் டோணியை குறை சொன்னார். மேலும் அவர் ஒரு பேட்டியில் ''டோணிக்கு நேரம் வந்துவிட்டது. அவர் இனி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்'' என்று கூறினார்.

டோணி குறித்து அஜித் அகர்கர்
கிட்டத்தட்ட லக்ஷ்மன் பேசியதை அப்படியே அஜித் அகர்கரும் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில் ''இந்திய அணி வேறொரு நல்ல வீரரை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. டோணி கேப்டனாக இருந்தால் அவரது பேட்டிங்கில் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இந்தியா இப்போது அவர் கேப்டன்சியை நம்பி இல்லை. பேட்டிங்கை நம்பி இருக்கிறது. அதை அவர் பூர்த்தி செய்வதில்லை'' என்றார்.

ஆகாஷ் சோப்ராவின் திட்டம்
சென்ற ஆஸ்திரேலிய தொடரில் டி-20 அணிக்காக டோணி தேர்வாகிய போதே ஆகாஷ் சோப்ரா தனது கோவத்தை தெரிவித்து இருந்தார். அதேபோல் அவர் ''இந்திய அணியில் டோணிக்கு பதில் டி-20 க்காக 'ரிசாப் பந்த்' சேர்க்கப்பட வேண்டும். அவர் சிறந்த பிளேயர் மற்றும் விக்கெட் கீப்பர். டோணி 2020ல் நடக்கும் டி-20 உலகக் கோப்பையில் விளையாட கூடாது'' என தெரிவித்து இருந்தார். இந்திய அணியில் 2003-2004 ஒரே ஒரு வருடம் மட்டுமே இவர் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவாக் இரண்டு கருத்து
சேவாக் சரியாக பார்ம் இல்லாமல் தவித்த போது கூட அவரை அணியில் வைத்து இருந்தவர் டோணி. இந்த நிலையில் டோணி குறித்து இரண்டு விதமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் அவர். முதலாவதாக ''டோணி இப்போது ஆடுவது போல் ஆடாமல் இன்னும் அடித்து ஆட வேண்டும். முதல் பந்தில் இருந்து அதிரடி காட்ட வேண்டும்'' என்றார். மேலும் ''டோணி நல்ல பார்மில் தான் இருக்கிறார் டி-20 மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் அவர் அணிக்காக விளையாட வேண்டும்'' என்று கூறினார்.
ரசிகர்கள் கருத்து
இந்த நிலையில் முன்னாள் வீரர்களின் இந்த குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அனைத்து முன்னாள் வீரர்களையும் கலாய்த்து வருகின்றனர். அகர்கர் தொடங்கி லக்ஷ்மன் வரை ஒருவர் விடாமல் கலாய்த்து வருகின்றனர். இதில் ''டோணி ரிட்டயர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள்தான் கிரிக்கெட் பார்ப்பதில் இருந்து ரிட்டையர் ஆக வேண்டும்'' என இவர் காமெடியாக குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











