தொடர் சொதப்பல்
21 வயதாகும் இளம் வீரர் பிரித்வி ஷா கடந்த 2 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரின் சொதப்பல் பயணம் தொடர்ந்தது. இதனால், இங்கிலாந்து தொடரின்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஷாவின் கம்பேக்
எனினும் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தொடர் 800 ரன்களுக்கு மேல் விளாசி ஃபார்முக்கு திரும்பினார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் 2021 தொடரிலும் டெல்லி அணிக்காக அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்தார். 8 போட்டிகளில் ஆடிய அவர் 308 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிறப்பான பேட்டிங்
ஆனால் பிரித்வி ஷா- வின் இடத்திற்கு ரோகித் சர்மா, சுப்மன் கில், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரோகித் சர்மாவை தவிர்த்து மீதமுள்ள 4 பேரும் கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் பிரித்வி ஷாவை விட குறைவான பேட்டிங் சராசரியை கொண்டுள்ளனர்.
பிரித்வி ஷா ( 42.37),
மயங்க் அகர்வால் (18),
சுப்மன் கில் (27.13)
கே.எல்.ராகுல் (17.56)
சேவாக் போன்றவர்
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சரந்தீப் சிங், விரேந்திர சேவாக் இந்திய அணிக்காக என்ன செய்தாரோ, அதே அளவிற்கு செயல்படும் திறமை பிரித்வி ஷாவிடம் உள்ளது. ஆனால் அவரின் கிரிக்கெட் வாழ்வின் தொடக்கத்திலேயே ஓரம் கட்டுவது சரியில்லை. ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் அவர் பல்வேறு அதிரடிகளை உள்நாட்டு தொடர்களில் காட்டியுள்ளார். இப்படிப்பட்டவர் இங்கிலாந்து புறக்கணிக்கப்பட்டிருக்க கூடாது.
அதிருப்தி
சமீப காலமாக இளம் வீரர் சுப்மன் கில் சரிவர விளையாடவில்லை. சமீபத்தில் நடந்த இங்கிலாந்து டெஸ்டில் கூட அவர் படு சொதப்பல் செய்தார். எனினும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள போது, பிரித்வி ஷா போன்ற இளம் திறமையாளருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.