டெஸ்ட் தொடர்களில் இந்தியா
இந்திய அணி கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் சில பெரிய வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்துள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி கடந்த 2014 முதல் இயங்கி வருகிறது. அணியில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வேகப் பந்துவீச்சில் முன்னணி
குறிப்பாக வேகப் பந்துவீச்சில் இந்திய அணி உலகிலேயே முன்னணி அணியாக மாறி உள்ளது. ஆனாலும், வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் வெளிநாட்டு ஆடுகளங்களில் தான் இந்திய அணி மிக மோசமாக தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலிய வெற்றி
2018ஆம் ஆண்டில் தான் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது இந்திய அணி.
மோசமான தோல்வி
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. எனினும், இந்தியா எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி பலத்தில் குறைந்த அணிகளாக இருந்தன. அடுத்து இந்திய அணி நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 0 - 2 என மோசமான தோல்வியை சந்தித்தது.
சிறப்பாக செயல்படவில்லை
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணி வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படவில்லை என அதிரடியாக கூறி உள்ளார். இதில் மறைக்க ஒன்றுமே இல்லை எனவும் அவர் கூறி உள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை
"வெளிநாடுகளிலும் நாம் சிறப்பாக ஆட வேண்டும். ஆனால், நாம் அதை செய்வதில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. நான் கேப்டனாக இருந்த போது கூட நான் வெளிநாட்டில் எப்படி ஆடுகிறேன் என்பதை வைத்து தான் என்னைப் பற்றி கூற முடியும் என கூறி இருந்தேன்" என்றார் கங்குலி.
இது பற்றி பேசுவோம்
மேலும், "அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் இது பற்றி பேசுவோம். அவர்கள் வெளிநாட்டில் சிறப்பாக ஆட உதவி செய்வோம்" என்று கூறினார் பிசிசிஐ தலைவர் கங்குலி.