நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சுலபமாக இருக்காது. வேர்வை சிந்தவும், சட்டை அழுக்காவதற்கும் இந்திய வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கோச் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜில் நாளை துவங்குகிறது.
ஏற்கனவே இரண்டு டெஸ்ட்களில் தோல்வியடைந்த நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி குறித்து இந்திய அணியின் கோச் ரவி சாஸ்திரி கூறியதாவது:
இந்த டெஸ்ட் தொடரில் மிகவும் மோசமான கட்டத்தில் இந்திய அணி உள்ளது. இந்த நேரத்தில் மன உறுதியோடு விளையாட வேண்டும். எந்த மாதிரி பந்துவீச்சையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.
அழுக்காவதற்கும், வேர்வை சிந்துவதற்கும் இந்திய வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். அடுத்தப் போட்டிகள் பந்துக்கும், பேட்டுக்குமான போட்டி மட்டுமல்ல. மன உறுதிக்கான போட்டியும் தான். அதற்கு வீரர்கள் தயாராக வேண்டும்.
இவ்வாறு கோச் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.