முதல் டி20 ஆட்டம்
இலங்கை அணி வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணி 134 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. அப்போது 19வது ஓவரை வீச வந்த ஹர்ஷல் பட்டேல் மோசமாக பந்துவீசினார். வைட், நோ பால், சிக்ஸர் என போக 16 ரன்களை வாரி வழங்கினார். இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பரபரப்பு சூழ்ந்தது. அதுவும் சமீகா கருணரத்னே நல்ல ஃபார்முடன் களத்தில் இருந்தார்.
கடைசிகட்ட பரபரப்பு
இந்த சூழலில் தான் கடைசி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசுவதற்கு பதிலாக அக்ஷர் பட்டேலிடம் கொடுக்கப்பட்டது. இது பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. முதல் பந்தே வைடாக செல்ல, 2வது பந்து டாட் ஆனது. பின்னர் 3வது பந்து சிக்ஸருக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் சிங்கிள்கள் எடுக்க, கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. எனினும் சாதூர்யமாக அதை சமாளித்து இந்தியா த்ரில் வெற்றி கண்டது.
ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி
இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்திருந்தார். அதில், மக்களை பயமுறுத்தி பார்க்க வேண்டும் என நினைத்தேன். நான் களத்தில் சிரித்துக்கொண்டே ஒரு விஷயத்தை செய்தால் அங்கு அனைத்தும் சரியாக உள்ளது என அர்த்தம். சரியான தூக்கமும், தண்ணீரும் எடுத்துக்கொள்ளாததால் தசைகள் பிடித்துக்கொண்டன. இதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அணியை நான் கடினமான சூழல்களில் தள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அப்போது தான் பெரிய போட்டிகளை வெல்ல சுலபமாக இருக்கும்.
இளம் வீரர்களின் திறன்
அக்ஷர் பட்டேலை கடைசி ஓவரை வீச வைத்தது ஒரு அனுபவம் தான். இதுபோன்ற சூழல்களில் தான் எங்களுக்கு நாங்களே சவால்களை கொடுத்துக்கொள்ள முடியும். உண்மையை கூற வேண்டும் என்றால் இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். ஷிவம் மாவியிடம் நான் கூறியது ஒன்று தான். ஐபிஎல்-ல் வீசியது போலவே பந்துவீசு, சிக்ஸர் என்றால் கவலைப்பட தேவை எனக்கூறினே. மற்றதெல்லாம் தானாக நடந்தது என ஹர்திக் பாண்ட்யா கூறினார்.