கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்சில், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடியால் இந்திய அணி பெரும் சரிவில் இருந்து மீண்டு கவுரவமான ஸ்கோரை எட்டியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. கேப்டவுனில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது.
புவனேஸ்வர்குமார் உள்ளிட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால், தென் ஆப்பிரிக்கா 286 ரன்களில் சுருண்டது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியும் தொடக்கத்தில் தடுமாறியது.
முரளி விஜய் 1, தவான் 16, கோஹ்லி 5 ரன்களில் நடையை கட்டினர். ரோகித் ஷர்மா 11 ரன்களிலும், புஜாரா 26 ரன்களிலும், அஸ்வின் 12 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்திய அணி 81 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா திடீரென அதிரடி காட்டி தென் ஆப்பிரிக்க பந்துகளை சிதறடித்தார்.
டீ பிரேக் நேரத்தில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. பாண்ட்யா 68 பந்துகளில் 81 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். 13 பவுண்டரிகளும் 1 சிக்சரும் விளாசியிருந்தார். புவனேஸ்வர்குமார் கை கொடுத்து 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதன்பிறகு சற்று நிதானமாக ரன் குவிப்பதில் பாண்ட்யா கவனம் செலுத்தினார். 95 பந்துகளில் 14 பவுண்டரிகள், 1 சிக்சர் உதவியோடு 93 ரன்கள் எடுத்திருந்தபோது ரபடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இந்தியா 209 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. புவனேஸ்வர்குமார் 86 பந்துகளை சந்தித்து சமாளித்து 25 ரன்கள் எடுத்து அவுட்டாகியிருந்தார். ரபடா மற்றும் பிளாண்டர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்டெயின், மோர்க்கல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 2வது இன்னிங்சை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா, இன்றைய 2வது நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர்கள் மார்க்ரம் 34, எல்கர் 25 ரன்களில் பாண்ட்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.