கேப் டவுன்: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆம்லா திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். புதிய கேப்டனாக டிவிலியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆம்லா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி 6 தொடர்களில் பங்கேற்றது.
இதில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாவ்வே அணிக்கு எதிராக கோப்பையை வென்றது. வங்கதேச தொடர் மழையில் பாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 0-3 என தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் கேப்டன் ஆம்லா மீது கடும் விமர்சனம் எழுந்தது.
இன்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 629 ரன்கள் குவித்ததால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த போட்டியிலும் தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கேப்டன் ஆம்லா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்ததால் அந்த அணி 627 ரன்கள் குவித்து தோல்வியில் இருந்து தப்பி 0-1 என பின்தங்கியது.
இதனிடையே கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்ட் முடிந்த சில மணிநேரங்களில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஹசீம் ஆம்லா அறிவித்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி வில்லியர்ஸ் ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக உள்ளார்.