புஜாரா நிதான ஆட்டம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடந்த 4வது மற்றும் இறுதிப் போட்டியில் 211 பந்துகளில் 56 ரன்களை எடுத்திருந்தார் சத்தீஸ்வர் புஜாரா. சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ரன்களை குவிப்பதற்கும் காரணமாக அமைந்தார். அவர்களுக்கு ஈடுகொடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைக்க உதவினார்.
10 முறை காயம்
அந்த போட்டியில் பாட் கமின்ஸ் மற்றும் ஹாசல்வுட்டின் பந்துகள் அவரது உடலை 10க்கும் மேற்பட்ட முறைகள் பதம்பார்த்தன. இந்நிலையில் அந்த நேரத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை இழக்காமல் இருப்பது அவசியம் என்பதால் பவுன்ஸ் பந்துகளை தன்னுடைய உடலில் தாங்கிக் கொண்டதாக புஜாரா தெரிவித்துள்ளார்.
பேட்டிங் செய்வதில் சிரமம்
கமின்ஸ் பந்துகளிலேயே தான் அதிகமாக காயம் பட்டதாக தெரிவித்துள்ள புஜாரா, தன்னுடைய கைகளால் அதை தடுக்க முயன்றிருந்தால் நிலை தடுமாறி அவுட்டாக நேர்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஒரு பந்து அவரது கைவிரலை பதம்பார்த்து அவர் பேட்டிங் செய்வதை சிரமத்திற்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான வெற்றி
அந்த காயத்தால் பேட்டை சரியாக பிடிக்க முடியாமல், அதன்போக்கில் தான் ஆடியதாகவும் புஜாரா கூறியுள்ளார். இதனிடையே, கடந்த 2018-19 சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெற்ற முதல் வெற்றியை காட்டிலும் தற்போதைய வெற்றி மிகவும் சிறப்பானது என்றும் புஜாரா தெரிவித்துள்ளார்.
மகளின் பிரத்யேக மருந்து
இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பியவுடன் அவருக்கு காயம் பட்ட இடங்களில் முத்தம் தரவுள்ளதாகவும், அதன்மூலம் அவரது காயங்கள் ஆறும் என்றும் அவரது இரண்டு வயது மகள் அதிதி தெரிவித்துள்ளதையும் மகிழ்ச்சியுடன்
குறிப்பிட்டுள்ளார் புஜாரா. அதிதிக்கு காயம் ஏற்படும்போது தான் முத்தம் தந்ததையும் முத்தத்தின்மூலம் காயங்கள் ஆறும் என்று அவள் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.