லண்டன்: மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது.
229 ரன்கள் எடுத்தால் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை முத்தமிடலாம்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் இங்கிலாந்து பேட் செய்தது. அந்த அணிக்கு பியூமன்ட் மற்றும் வின்பீல்ட் நல்ல தொடக்கம் கொடுக்க முயற்சித்தனர். இதில் பியூமன்ட் 23, வின்பீல்ட் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கேப்டன் ஹீதர்நைட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சாரா டெய்லரும், ஸ்கிவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன் குவித்து வந்தனர். இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்தியா திணறியது.
45 ரன்கள் எடுத்த நிலையில் சாரா டெய்லர், ஜூலன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த அதிரடியாக அவரைத் தொடர்ந்து ஆட வந்த பிரான், ஜூலனின் 2வது பந்தில் காலியானார். தொடர்ந்து நதாலி ஸ்கிவர், அரை சதம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்தவர்களில் காத்தரின் பிரன்ட் பிரமாதமாக ஆடினார். நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆடிய அவர் 34 ரன்களைச் சேர்த்தார்.
ஜென்னி கன் 24 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை இங்கிலாந்து எடுத்தது. இந்தியத் தரப்பில் ஜூலன் கோஸ்வாமி 3 விக்கெட்களைச் சாய்த்தார். பூனம் யாதவுக்கு 2 விக்கெட் கிடைத்தது.
இரு அணிகளும் அரை இறுதிப் போட்டிகளில் ஆடிய அதே வீராங்கனைகளுடன்தான் இப்போட்டியிலும் ஆடுகின்றன.