எச்சில் பயன்பாட்டிற்கு தடை
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்நிலையில், அதை மீண்டும் துவங்க முடிவெடுத்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போட்டிகளின்போது பௌலர்கள் எச்சில் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
பௌலர்கள் எதிர்ப்பு
இந்நிலையில் பந்தை ஷைன் செய்ய எச்சில் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டால் பந்து ஸ்விங் ஆவது தடைபடும் என்றும் அதனால் கிரிக்கெட்டின் அழகே குறைந்துவிடும் என்றும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக போட்டிகள் மாறிவிடும் என்றும் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். எச்சிலுக்கு மாற்றுடன் ஐசிசி வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எச்சில் பயன்படுத்த அனுமதிக்கலாம்
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து, அதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பந்துகளில் எச்சிலை பயன்படுத்த அனுமதிக்கப்படலாம் என்று முன்னாள் பௌலர் அஜித் அகர்கர் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறுவதை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பௌலர்களுக்கு எச்சில் பயன்பாடு
கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு பேட் போல, பந்துகளை ஷைன் செய்ய பௌலர்களுக்கு எச்சில் மிகவும் அவசியம் என்றும் அகர்கர் கூறியுள்ளார். ஆனால் வேறு வழியில்லாமல்தான் ஐசிசி மற்றும் அதன் மெடிக்கல் குழுவினர் இந்த முடிவுக்கு சென்றுள்ளனர் என்பது தெரிகிறது. அதனால் அடுத்த மாதம் நடக்கவுள்ள இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் போட்டியின்போது பௌலர்களின் அனுபவத்தை கொண்டு இதை தொடர்ந்து திட்டமிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அகர்கரின் சாதனை
இந்திய அணியில் பங்கேற்று 191 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அகர்கர், குறுகிய காலகட்டத்திலேயே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 349 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அகர்கர், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத்துக்கு அடுத்ததாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.