மென்டிஸ் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இந்தியா.. 2008 ஆசிய கோப்பையை இழந்த கதை
மும்பை : ஆசிய கோப்பை வரலாறில் இன்று அஜந்தா மென்டிஸ் இந்தியாவின் ஆசிய கோப்பை இறுதி வெற்றியை தட்டிப் பறித்த போட்டியை பற்றி பார்க்கலாம்.
ஆசிய கோப்பை 2008 தொடரில் ஆறு அணிகள் பங்கேற்றன. முதலில் இரண்டு பிரிவுகளாக ஆடிய ஆறு அணிகளில், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த நான்கு அணிகள் "சூப்பர் போர்" பிரிவில் ஆடின.
அந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிக்கு தேர்வான அணிகளைப் போல பாகிஸ்தான் இரண்டு வெற்றிகளை பெற்றாலும், போனஸ் புள்ளிகளை பெற தவறியதால் இறுதி வாய்ப்பை இழந்தது.

சூப்பர் போரில் இந்தியா வெற்றி
இந்தியா, இலங்கை அணிகள் அந்த தொடரில் முன்பு சூப்பர் போர் பிரிவில் ஒரு முறை மோதி இருந்தன. அந்த போட்டியில் இலங்கை அடித்த 308 ரன்களை துரத்தி, இந்தியா வெற்றி பெற்றது. இதனால், இறுதிப் போட்டியிலும் இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அஜந்தா மென்டிஸ் அந்த சூப்பர் போர் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கவில்லை.

ஜெயசூர்யா சதம்
இறுதிப் போட்டியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. ஜெயசூர்யா அந்த போட்டியில் சதம் அடித்தார். அந்த அணி 273 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து இருந்தது. ஏற்கனவே, இந்தியா, இலங்கை அணிக்கு எதிராக 308 ரன்களை சேஸ் செய்து வென்று இருந்ததால், எளிதாக மீண்டும் வெல்லும் என கணிக்கப்பட்டது.

ஆறு விக்கெட்கள் அள்ளிய மென்டிஸ்
அடுத்து ஆடிய இந்தியா, மென்டிஸ் காட்டிய சுழல் வித்தையை புரிந்து கொள்ளும் முன் வரிசையாக வீழ ஆரம்பித்தது. அந்த போட்டியில் முத்தையா முரளிதரனும் இருந்தார். இரட்டை சுழல் தாக்குதலாக இருவரும் மாறி மாறி பந்து வீச இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். மென்டிஸ் ஆறு விக்கெட்கள் அள்ளினார். இந்தியா 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேவாக் 60, தோனி 49 ரன்கள் எடுத்தது மட்டுமே ஆறுதலாக அமைந்தது.

மென்டிஸின் வசந்த காலம்
இலங்கை அணியில் முரளிதரனுக்கு அடுத்து யார்? என்ற கேள்விக்கு பதிலாக வந்த அஜந்தா மென்டிஸ் சில காலம் மட்டுமே உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார். அவரது நுணுக்கத்தை முதலில் தெரியாமல் தவித்த மற்ற நாடு பேட்ஸ்மேன்கள் விரைவில் அதை கணித்து அவரை சாதாரண சுழல் பந்துவீச்சாளர் பட்டியலில் சேர்த்துவிட்டனர். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் இந்தியா அவரிடம் சிக்கி ஆசிய கோப்பையை இழந்தது.


Click it and Unblock the Notifications