முதல் டெஸ்ட்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அதுவும் இந்தப் போட்டி பகல் - இரவு டெஸ்ட் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ
முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. போட்டிக்கு முதல் நாளே களமிறங்கும் வீரர்கள் பட்டியலை வெளியிடும் வழக்கத்தை சில தொடர்களில் இந்தியா செயல்படுத்தி உள்ளது.
அதிர்ச்சி
முக்கியமான இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அதே பாணியை செயல்படுத்தி ஆச்சரியம் அளித்துள்ளது பிசிசிஐ. இந்த அணிப் பட்டியலில் துவக்க வீரராக ப்ரித்வி ஷாவை தேர்வு செய்து இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அவருக்கு வாய்ப்பு
ப்ரித்வி ஷா மோசமான பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இருந்தே அவர் பார்ம் இப்படித் தான் உள்ளது. பயிற்சிப் போட்டியில் அவர் மோசமாக செயல்பட்டார். அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட்
விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட் சதம் அடித்து போட்டி போட்டாலும், சிறந்த அனுபவ விக்கெட் கீப்பர் என்ற முறையில் விரிதிமான் சாஹாவுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டது. பண்ட்டுக்கு இடம் அளிக்காதது சில ரசிகர்களின் அதிருப்தியை பெற்றுள்ளது.
மூன்று வீரர்கள் இல்லை
அதே போல, நல்ல பார்மில் இருக்கும் கேஎல் ராகுலுக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என கருதப்பட்ட ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் என சமீபத்தில் தங்கள் பார்மை நிரூபித்த வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர்?
அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ்வுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்திய அணி பட்டியல்
முதல் டெஸ்டில் ஆட உள்ள இந்திய அணி பட்டியல் - மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா.