இந்தியா - நியூசிலாந்து தொடர்
இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என வென்றது. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.
இந்தியா தோல்வி
அந்த முதல் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தது. எனினும், நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஒருநாள் தொடரில் தற்போது 0 - 1 என பின்தங்கி உள்ளது. அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் தான் இந்திய அணி தொடரை வெல்ல முடியும்.
காரணம் என்ன?
முதல் போட்டி தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இல்லாதது தான். பும்ரா, ஜடேஜா தவிர அனைத்து பந்துவீச்சாளர்களையும் மிக எளிதாக அடித்து ஆடினார்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். கூடுதல் பந்துவீச்சாளரை பயன்படுத்துவதிலும் குழப்பம் உள்ளது.
கேதார் ஜாதவ் நிலை
கூடுதல் பந்துவீச்சாளராக கேதார் ஜாதவ் அணியில் இடம் பெற்று இருந்தும், அவரை கேப்டன் கோலி பயன்படுத்தவில்லை. ஜாதவ்வை பந்துவீச்சாளராக பயன்படுத்த வேண்டாம் என கோலி நினைத்தால், வேறு ஒரு ஆல்-ரவுண்டரை அவரது இடத்தில் ஆட வைக்கலாமே என்பது பலரின் கருத்தாக உள்ளது.
சுழற்பந்துவீச்சாளர் தேவை
நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வேகப் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆடி வருகிறார்கள். அதே சமயம், சுழற் பந்துவீச்சில் குல்தீப் யாதவ்வை அடித்து ஆடினாலும், சாஹலுடன் அவர் சேர்ந்து பந்து வீசினால் விக்கெட்கள் கிடைக்கும் என்ற கருத்தும் உள்ளது. உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியில் குல்தீப் - சாஹல் ஜோடியாகவே பந்து வீசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் யாதவ் - சாஹல் ஜோடி
முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில், குல்தீப் யாதவ், சாஹல் சேர்ந்து ஆடினால் சிறப்பாக பந்து வீசுவார்கள். அவர்கள் மத்திய ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவார்கள். எனவே, அவர்கள் இருவரையும் சேர்த்து ஆட வைக்க வேண்டும் என்றார்.
ஜாதவ் நீக்கம்
மேலும், சாஹலை அணியில் சேர்க்க வேண்டி, கேதார் ஜாதவ்வை அணியில் இருந்து நீக்கலாம் என்ற கருத்தையும் அவர் முன் வைத்துள்ளார். ஆனால், ஹர்பஜன் சிங்கின் இந்த யோசனையை கோலி செயல்படுத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அதற்கு காரணம் ஆடுகளம் தான்.
ஆடுகளம் எப்படி?
இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள ஆக்லாந்து ஆடுகளம் சிறியது என்பதால் சிக்ஸர் அடிக்க எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, அதிக சுழற் பந்துவீச்சாளர்களை கேப்டன் கோலி பயன்படுத்த மாட்டார் என கருதப்படுகிறது. எனவே, சாஹல் இடம் பெற ஒரு வழி மட்டுமே உள்ளது.
ஜடேஜா இருக்கிறார்
ஏற்கனவே. ஆல் - ரவுண்டராகவும், முழு நேர சுழற் பந்துவீச்சாளராகவும் இருக்கும் ஜடேஜாவை நீக்கி விட்டு, அவர் இடத்தில் சாஹலை ஆட வைக்கலாம். அதன் மூலம், குல்தீப் யாதவ் - சாஹல் ஜோடி சேர்ந்து பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கும்.
கோலி முடிவு என்ன?
எனினும், அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டையும் சம நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் கேப்டன் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான அணித் தேர்வில் அதிரடி முடிவுகளை எடுக்க மாட்டார் என்றும் சில விமர்சகர்கள் கூறி உள்ளனர்.