டிராவிட்
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் இன்று அறிமுகம் ஆகியுள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அக்சர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சிராஜ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
நியூசிலாந்து
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இல்லை. மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட, ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி, டாட் ஆஸ்டில், லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். டிம் சவுதி கேப்டனாக களமிறங்கி உள்ளார். இதில் இந்தியா டாஸ் வென்ற நிலையில் ஆரம்பமே புவனேஷ்வர் குமார் விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார். டாலி மிட்சல் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஷ்வர் குமார் ஓவரில் அவுட் ஆனார்.
பேட்டிங்
அதன்பின் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சுதாரித்தனர். சாப்மேன் ஒரு பக்கம் அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் கப்டில் நிதானமாக ஆடினார். இதனால் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் கையைவிட்டு போனது. ஆனால் 63 ரன்கள் எடுத்து இருந்த சாப்மன் விக்கெட்டை அஸ்வின் 14வது ஓவரில் எடுத்தார். பின் அதே ஓவரில் அஸ்வின் பிலிப்ஸ் விக்கெட்டை எடுத்தார்.
ஆட்டம் மாறியது
இதில்தான் ஆட்டம் தடம் மாறியது. நியூசிலாந்து ரன் ரேட் குறைந்தது. அதன்பின் நிதானமாக ஆடிய கப்டில் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய செய்பர்ட், ரச்சின், சண்டர் எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். சிராஜ் விறல் உடைந்த நிலையிலும் கடைசி ஓவரில் ஒரு விக்கெட் எடுத்தார். இன்று அஸ்வின், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட் எடுத்தார். இதனால் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 164 ரன்கள் எடுத்தது.
நிர்ணயம்
இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 165 ரன்கள் நிர்ணயம் செய்தது. அதன்பின் இறங்கிய ரோஹித் - ராகுல் ஜோடி இரண்டாவது ஓவரில் இருந்தே அதிரடி காட்டினார்கள். ராகுல் 14 பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று 15 ரன்கள் எடுத்தார். அவர் அவுட்டான பின் ரோஹித் சர்மா ருத்ர தாண்டும் ஆட தொடங்கினார். பொறுப்பாக கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார்.
சூர்யா குமார்
இன்னொரு பக்கம் சூர்யா குமார் யாதவும் பொறுப்பாக அதிரடியாக ஆடினார். 36 பந்தில் 48 ரன்கள் எடுத்து ரோஹித் அவுட் ஆனார். இதில் 2 பவுண்டரி, 5 சிக்ஸ் அடக்கம். அதன்பின் வேகம் எடுத்த சூர்யா குமார் யாதவ் 3 சிக்ஸ், 6 பவுண்டரி என்று 40 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். அதன்பின் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் திணறிய நிலையில் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் போட்டி
இதையடுத்து கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் இறங்கினார். முதல் பந்து வைட் போக அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார் வெங்கடேஷ் ஐயர். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் அவுட் ஆனார். இதுதான் அவருக்கு முதல் போட்டி. அதன்பின் பண்ட் பவுண்டரி அடித்து மேட்சை முடித்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டி 20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வென்றுள்ளது.19.4 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்து இந்தியா வென்றது.