பிக் பாஷ் தொடரில் அதிர்ச்சி
அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது யாராலும் மறக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். அதுபோன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவில் ஆடப்பட்டு வரும் பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்துள்ளது. அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சிட்னி தண்டர் அணி 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
140 ரன்கள் இலக்கு
டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, கிறிஸ் லின் 36, கிராண்ஹோம் 33 ஆகியோரின் ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. அதில் சிட்னி தண்டர் அணியின் ஃபரூஹி 3, டேனியல் சாம்ஸ் மற்றும் டக்கெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். டி20 கிரிக்கெட்டில் 140 என்ற இலக்கு எளிய இலக்கு தான் என்பதால், இந்த ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள்
அதுமட்டுமல்லாமல் சிட்னி தண்டர் அணியில் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அதிகமுள்ள அலெக்ச் ஹேல்ஸ், ரூசோவ், டேனியல் சாம்ஸ், கிறிஸ் கிரீன் என ஏராளமான வீரர்கள் இருக்கின்றனர். இதனால் நிச்சயம் சிட்னி தண்டர் அணிக்கே வெற்றி என்று பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையான ட்விஸ்ட் அங்குதான் அரங்கேறியது.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
அட்லெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் சார்பில் முதல் ஓவரை ஷார்ட் வீச, 3வது பந்தில் மேத்யூ கில்க்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். சரி, தொடக்கம் தான் இப்படி அமைந்தது என்று பார்த்தால், அகர் வீசிய 2வது ஓவரில் ரூசோவ் 3 ரன்களிலும், கேப்டன் சங்கா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிட்னி தண்டர் அணி பரிதாபமான நிலைக்கு சென்றது. கால்பந்து ரசிகர்கள் யாராவது பார்த்திருந்தால், ஸ்கோரை பார்த்து நிச்சயம் குழம்பி போயிருப்பார்கள்.
15 ரன்களுக்கு ஆல் அவுட்
தொடர்ந்து 3வது ஓவரின் முதல் பந்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் நடையை கட்ட, அதே ஓவரின் 5வது பந்தில் சாம்ஸ் 1 ரன்னில் வெளியேறினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அவர்களை பின்பற்றும் வகையில் டெய்லெண்டர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இப்படி சிட்னி அணி வீரர் பெவிலியனுக்கு வருவதும், போவதுமாய் இருந்த நிலையில், ஹென்ரி தார்ன்டன் வீசிய 6வது ஓவரில் ட்க்கெட் 4 ரன்களில் ஆட்டமிழந்ததோடு ஆட்டம் முடிவுக்கு வந்தது.
5 பேட்ஸ்மேன்கள்
மொத்தமாக சிட்னி தண்டர் அணி 5.5 ஓவர்களுக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்தப் போட்டியில் அட்லெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர்களில் ஹென்ரி தார்ன்டன் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் சிட்னி அணியை சேர்ந்த 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். சிட்னி தண்டர் அணியில் பிரண்டன் டக்கெட் எடுத்த 4 ரன்களாக அதிகபட்ச ரன்களாகும். இதன் மூலம் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
வரலாறு
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான அணிகள் ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் ரசிகர்களுக்கு வழங்கி வந்தாலும், சிட்னி தண்டர்ஸ் அணியை போல் அதிர்ச்சியை வேறு எந்த அணியும் கொடுத்ததில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு சிட்னி தண்டர் அணியின் வரலாறு, ரசிகர்களிடையே அடிக்கடி பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சீனியர் கிரிக்கெட் போட்டியில் செக் குடியரசுக்கு எதிரான போட்டியில் டர்க்கி அணி 21 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே இதுவரை மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.