20 ஆண்டுகளுக்கு முன்.. சச்சின், கும்ப்ளேவுடன் பேசவே பயந்தேன்.. ஓய்வறை ரகசியம் சொன்ன யுவராஜ் சிங்!
மும்பை: 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியில் இடம்பிடித்த போது, சீனியர் வீரர்களான சச்சின், கங்குலி, கும்ப்ளே, டிராவிட் ஆகியோருடன் ஒன்றாக உட்காருவதற்கு பயமாக இருந்ததாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மிக இள வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து பல்வேறு சாதனை படைத்தவர் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்ற மிகமுக்கிய காரணமாக அமைந்தவர் யுவராஜ்.
சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து இளம் வீரர்களோடு யுவராஜ் சிங் பயணித்து வருகிறார். அவர்களுக்கான பயிற்சி, அவர்களுக்கான ஊக்கம் என பல்வேறு வகையில் இந்திய கிரிக்கெட்டுக்கு யுவராஜ் சிங் பங்களித்து வருகிறார்.

யுவராஜ் சிங் பேச்சு
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் தொடங்க உள்ள டி20 லீக் தொடர் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே, கிரீம் ஸ்மித், மார்க் பவுச்சர் உட்பட ஏராளமான வீரர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் கலந்துகொண்டு, இந்திய அணியில் தனது ஆரம்ப கால ஓய்வறை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

டிரெஸிங் ரூம் ரகசியம்
இந்த நிகழ்ச்சியில் யுவராஜ் சிங் பேசுகையில், 2000ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியில் நான் அறிமுகமானேன். அந்த அணியில் சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட், கும்ப்ளே, கங்குலி என ஒரு பட்டாளமே இருந்தது. அவர் அருகில் சென்று உட்காருவதற்கே பயமாக இருந்தது. எனது பயிற்சியாளரிடம் சென்று வேறு இடத்தில் எனக்கு இடம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களும் நீ இருக்கும் அணியிலேயே இருக்கிறார்கள். அதனால் நீ அவர்களோடு அமர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

யுஅவ்ராஜ் சிங் தயக்கம்
கிட்டத்தட்ட இந்த சம்பவம் நடைபெற்று முடிந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. இருப்பினும் அவர்கள் முன்னிலையில் அமர்வதற்கு இப்போது அச்சமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் மிகுந்த கவனத்துடன் தான் செயல்படுகிறேன். இதனை கும்ப்ளே முன்னால் இருந்து சொல்வதற்கே தயக்கமாக இருக்கிறது. அந்த காலத்தில் சீனியர் வீரர்களுடன் பேசுவதற்கே எனக்கு சில மாதங்கள் ஆனது.

ஐபிஎல் மாற்றம்
ஆனால் இப்போது ஐபிஎல் தொடர் இளம் வீரர்களை மாற்றியுள்ளது. குழந்தைகளாக நம்மை டிவியில் பார்த்தவர்கள் பலரும், இப்போது ஓய்வறையில் நேரம் செலவிட்டு வருகிறார்கள். ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு அதிக நம்பிக்கையையும், முதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. அனைவரையும் எளிதில் அணுகுவதற்கான வாய்ப்பையும் ஐபிஎல் தொடர் உருவாக்கி கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications