ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய முரளி விஜய் 1 ரன்னில் வெளியேற, ரஹானே நிதானமாக ஆடி 34 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த அம்பத்தி ராயுடு ஜிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சை கவனத்துடன் எதிர்கொண்டு பொறுப்புடன் ஆடினார்.
ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து பவிலியன் திரும்பினர். திவாரி 2 ரன்களுக்கும், உத்தபா ரன் கணக்கைத் தொடங்காமலும், விக்கெட்டை இழந்தனர்.
ஜாதவ் 5 ரன்களுக்கு வெளியேற, ஸ்டூவர்ட் பின்னி அபாரமாக ஆடி 77 ரன்கள் குவித்தார். அம்பத்தி ராயுடு 199 பந்துகளுக்கு 124 ரன்களும், அக்ஷர் பட்டேல் 2 ரன்களும் சேர்த்து இறுதி வரை களத்தில் இருக்க இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்தது.
ஜிம்பாப்வே வீரர் திரிபானோ, சிபாபா தலா இரண்டு விக்கெட்டுகளையும், விடோரி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து சற்று எளிதான இலக்கோடு ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சிபாண்டா 20 ரன்களும், சிபாபா 3 ரன்களுக்கும் வெளியேற, மசாகட்சா 34 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து சிகும்புரா களம் இறங்கியதும், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வில்லியம்ஸ் டக் அவுட் ஆக, சிக்கந்தர் ரசா 37 ரன்களுக்கு வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட போட்டியின் இறுதி ஓவரில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், அந்த ஓவரில் ஜிம்பாப்வே 5 ரன்களே சேர்த்து 251 ரன்களுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது. இதையடுத்து இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
நிதானத்துடனும், கவனமுடனும் ஆடிய சிகும்புரா 157 பந்துகளில் அடித்த 104 ரன்களும் வீணானது.
இந்திய தரப்பில் ஸ்டூவர்ட் பின்னி, அக்க்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார், குல்கர்னி, ஹர்பஜன்சிங், தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது 124 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அம்பத்தி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2 வது ஒரு நாள் போட்டி 12 ஆம் தேதியும், 3 வது ஒருநாள் போட்டி 14 ஆம் தேதியும் நடைபெறுகிறது.