அதிரடி தொடக்கம்
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். செஃபாலி வர்மா 46 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் நின்ற ஸ்மிருதி மந்தானா அதிரடியாக விளையாடி 71 ரன்கள் சேர்த்தார். இதனால் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்திகா பாட்டியா 2 ரன்களில் வெளியேறினார்.
மித்தாலி அரைசதம்
நடுவரிசையில் கேப்டன் மித்தாலி ராஜ் 68 ரன்கள் சேர்த்தார். முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 2 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார். ஒரு கட்டத்தில் இந்திய மகளிர் அணி 300 ரன்களுக்கு அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்வரிசை வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது.
பார்ட்னர்ஷிப்
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லிசில் 6 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் லாரா மற்றும் லாவ்ரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் கேப்டன் சூன் லுர்ஸ் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கடைசி ஓவர் டுவிஸ்ட்
இந்த நிலையில், இந்தியாவுக்கு ஆபத்து தரும் வகையில் விளையாடிய நடுவரிசை வீராங்கனைகள் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் சிங்கிள்ஸ், 2வது பந்து ரன் அவுட் என இந்தியா மிரட்ட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது, அந்த ஓவரின் 5வது பந்தில் தென்னாப்பிரிக்க வீராங்கனை டு பிரிஸ் அடித்த பந்து கேட்ச் ஆனது. ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால், கடைசி பந்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது.
மித்தாலி நன்றி
இதன் மூலம் இந்திய மகளிர் அணி உலககோப்பை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. உலககோப்பையை வெல்ல வேண்டும் என்ற மித்தாலி ராஜ், கோஸ்வாமியின் கனவு பறிப்போனது.தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள மித்தாலி ராஜ், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். பலரும் எங்களுக்காக ஆதரவு அளித்தீர்கள் அதற்கு நன்றி. எதிர்காலத்திலும் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு அளியுங்கள் என்று கூறினார்.