மழையின் கதகளி.. இந்திய அணியின் ஜிமிக்கி கம்மல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நடந்த மினி டி-20 போட்டியில் வென்று, நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக தொடரை இந்தியா வென்றுள்ளது.
நியூசிலாந்து அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட வந்தது. இதில் ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

டி-20 போட்டிகளில் டெல்லியில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நியூசிலாந்தும் வெல்ல, சமநிலையில் அமைந்தது. மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. மழையில் ஆட்டம் துவங்க தாமதமானது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலும் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டி மழையில் தடைபட்டது.
அதுபோன்று திருவனந்தபுரம் போட்டியும் முடிந்து விடுமோ என்ற ரசிகர்கள் கவலைப்பட்டனர். 29 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதால் மழையால் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று கேரள கிரிக்கெட் சங்கம், கூடல்மாணிக்கம் கோவிலில் தாமரைப்பூ மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தது.
அந்தப் பிரார்த்தனை பலித்தது. 8 ஓவர்களாக கொண்டதாக போட்டி நடந்து இந்தியா திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், நியூசிலாந்துக்கு எதிராக டி-20 போட்டித் தொடரை முதல் முறையாக வென்றது. டெல்லியில் நடந்த போட்டியின்போது, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, முதல் முறையாக தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
2015 அக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருதினப் போட்டித் தொடரில் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பிறகு உள்நாட்டில் நடந்த எந்தப் போட்டியிலும் தோற்கவில்லை.
அடுத்ததாக இலங்கை அணி இந்தியாவுக்கு வருகிறது. தலா 3 டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 போட்டிகள் கொண்ட தொடர்கள் நடக்க உள்ளன. முதல் டெஸ்ட், கோல்கத்தா ஈடன் கார்டனில் வரும் 16ல் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து நாக்பூரில் நவம்பர் 24ம் தேதி இரண்டாவது டெஸ்ட், டெல்லியில் டிசம்பர் 2ம் தேதி மூன்றாவது டெஸ்ட் நடக்க உள்ளது.
Story first published: Wednesday, November 8, 2017, 17:46 [IST]
Other articles published on Nov 8, 2017


Click it and Unblock the Notifications