4 முக்கிய போட்டிகள்
ஒரு நாள் போட்டிகளில் அதிக ஸ்கோர் எடுக்கப்பட்ட போட்டிகளில் பத்தை எடுத்துப் பார்த்தால் அதில் 4 போட்டிகள் இந்தியா கலந்து கொண்டு நொறுக்கி அள்ளிய போட்டிகளாக உள்ளன. அதில் 2 போட்டிகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அதாவது அந்த இரண்டு போட்டியிலும் இந்தியத் தரப்பில் தலா ஒரு வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தியிருந்தார். ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இன்னொருவர் ஷேவாக்.
ஷேவாக்கின் அதிரடி
இந்தியாவின் இந்த நான்கு போட்டிகளில் டாப் 3 போட்டிகளில் ஷேவாக்கின் பங்கு மகத்தானதாக இருந்திருக்கிறது. அதாவது 3 போட்டிகளிலும் மனிதர் சதம் போட்டுள்ளார். அதை விட முக்கியமாக ஷேவாக்தான் இந்த மூன்று போட்டிகளிலும் மேன் ஆப் தி மேட்ச் வென்றிருக்கிறார். அதிலும் ஒரு போட்டியில் அவர் கேப்டனாக வேறு செயல்பட்டுள்ளார். ஒரு போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இல்லாமல் ஒன் டவுனாக இறங்கி பட்டையைக் கிளப்பியுள்ளார்.
முதல் போட்டியில் 114
முதல் போட்டி 2007ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்தியா -பெர்முடா இடையே நடந்த ஒரு நாள் போட்டியாகும். இதில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் ஷேவாக் ஒன்டவுனாக இறங்கி 114 ரன்களை வெளுத்தார். டிராவிட்தான் கேப்டன். கங்குலி 89 ரன்களைக் குவித்தார். யுவராஜ் சிங் 83 ரன்களை விளாசினார். இந்தியா 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மேன் ஆப் தி மேட்ச் சதம் போட்ட ஷேவாக்கிற்கு கிடைத்தது.
2வது போட்டியில் 146
2வது போட்டி ராஜ்காட்டில் 2009ம் ஆண்டு நடந்த இந்தியா -இலங்கை இடையிலானது. இதில் இந்தியா 414 ரன்களைக் குவித்தது. வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் இந்தியா வென்று திரில் வெற்றியைச் சுவைத்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வீரேந்திர ஷேவாக் அதிரடி ஆட்டம் காட்டி 146 ரன்களைக் குவித்தார். அதுவும் வெறும் 102 பந்துகளில். அவருக்குத் துணையாக சச்சின் 69, தோனி 72, ஜடேஜா 30 ரன்களை எடுத்தனர். பின்னர் ஆடிய இலங்கை அணியில் தில்ஷன் 160 ரன்களைக் குவித்தார். ஆனாலும் இந்தியாவின் சமயோஜிதத்தால் 3 ரன்களில் இந்தியா வென்றது. ஷேவாக் மேன் ஆப் தி மேட்ச் ஆனார்.
3வது போட்டியில் 219
3வது போட்டி 2011ல் இந்தூரில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரானது. இப்போட்டியில் இந்தியா 418 ரன்களைக் குவித்தது. இது ஒரு புதிய வரலாறு படைத்த போட்டியாகும். இப்போட்டியில் சச்சின் ஒரு நாள் போட்டிகளில் எடுத்திருந்த நாட் -அவுட் 200 ரன்கள் என்ற சாதனையை ஷேவாக் முறியடித்த போட்டியாகும். இப்போட்டியில் அதிரடியாக பட்டையைக் கிளப்பிய ஷேவாக் 219 ரன்களைக் குவித்து மைதானத்தை மிரள வைத்தார்.
சச்சின் சாதனை காலி
இப்போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டார் ஷேவாக். அவரும் கம்பீரும் இணைந்து அதிரடியாக ஆடினர். ஷேவாக் 219 ரன்கள் எடுத்து 44வது ஓவரில்தான் வெளியேறினார். கம்பீர் 67, ரெய்னா 55, ரோகித் சர்மா 27, கோலி 23 என பக்க பலமாக ஆடினர். இப்போட்டியில் இந்தியா 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 418 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 265 ரன்களில் சுருண்டு மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.
சச்சின் போட்ட 200
டாப் 10 போட்டிகளில் இந்தியாவின் 4வது போட்டி சச்சினின் சாதனையை உள்ளடக்கியதாகும். 2010ம் ஆண்டு குவாலியரில் நடந்த இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் போட்டி இது. இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தார். இதுதான் ஒரு நாள் போட்டிகளில் அவர் அடித்த முதல் இரட்டை சதமாகும். ஆட்டமிழக்காமல் 200 ரன்களைக் குவித்தார் சச்சின் டெண்டுல்கர். இப்போட்டியின் நாயகனும் அவர்தான்.