முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஸ்கோர் மிக குறைவாக இருந்ததால், சுலபமாக வென்றுவிடலாம் என நினைத்து வந்த இங்கிலாந்து வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜஸ்பிரித் பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட் எடுத்து இங்கிலாந்து பேட்டிங் வரிசையை திணறடித்தனர். கேப்டன் ஜோ ரூட்டே 21 ரன்களுக்கு வெளியேறிவிட்டதால் அந்த அணி 150 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
முன்னிலை
ஆனால் அதன்பிறகு வந்த ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினர். அதிகபட்சமாக ஒல்லி போப் 81 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 50 ரன்களும் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து அணி 291 ரன்களை குவித்து இந்திய அணியை விட 90 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்த போது 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்திய அணி திட்டம்
இந்நிலையில் 3வது நாள் ஆட்டமான இன்று இந்திய அணியின் திட்டம் எப்படி இருக்கப் போகிறது என வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் பேசியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், 2ம் நாள் ஆட்டத்தின் முதல் 40 நிமிடங்களுக்கு உள்ளாகவே நாங்கள் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினோம். அதன்பிறகு, பிட்ச்-ல் ஈரப்பதம் குறைந்து, வரண்டதாக மாறத்தொடங்கியது. இதனால் பந்தில் ஸ்விங் குறைந்ததால் தான் அதிக பவுண்டரிகள் சென்றது.
இன்றைய ஆட்டம்
ஓவல் மைதானத்தின் பிட்ச் தற்போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. பிட்ச் நன்கு வரண்டு காணப்படுகிறது. எனவே தற்போது பேட்டிங் செய்து வரும் இந்திய அணி அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. தற்போது இருக்கும் சூழலுக்கு பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் மட்டுமே இந்த பிட்சில் விக்கெட் எடுக்க முடியும். இதனால், இந்தியாவால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் எனத்தெரிவித்துள்ளார்.