முதல் போட்டியில் வெற்றி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் கிரிக்கெட் முத்தரப்பு தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சர்வதேச டி20 தொடரான இந்த தொடரில் தங்களுடைய முதல் போட்டியிலேயே இங்கிலாந்து வீராங்கனைகளை மண்ணை கவ்வ செய்துள்ளனர் இந்திய வீராங்கனைகள்
முதல் போட்டியிலேயே நிரூபணம்
நியூசிலாந்திற்கு எதிராக அந்த நாட்டில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் மண்ணில் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று தற்போது இந்திய மகளிர் அணியும் நிரூபித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை இந்தியா வெற்றி கொண்டுள்ளது.
அபாரமாக பௌலிங் போட்ட இந்திய அணி
இங்கிலாந்துடன் இந்தியா மோதிய முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ராஜேஸ்வரி கயக்வாட் 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளும் மற்றும் ராதா யாதவ் 33 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும் எடுத்து சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தனர். இதன்மூலம் இங்கிலாந்து 147 ரன்களுக்கு சுருண்டது. இதேபோல ஷிகா பாண்டேவும் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கைகொடுத்த இளம் வீராங்கனை
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதேபோல 15 வயதான ஷபாலி வர்மா 30 ரன்களும் ஸ்மிரிதி வந்தனா 15 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக் 26 ரன்களும் அடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனியா பாட்டியா இருவரும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சொற்ப ரன்களில் 4 விக்கெட்டுகள்
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் அமி ஜோன்ஸ், டானி வியாட், நடாலி ஸ்சீவர், பிரான் வில்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 10 ஓவர்களில் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆயினும் அணியின் கேப்டன் ஹெதர் நைட் 44 பந்துகளில் அடித்த 67 ரன்கள் அந்த அணியின் ரன் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்தது. தொடர்ந்து பௌலிங்கை இந்திய அணி டைட்டாக்க 147 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது.
பரபரக்க வைத்த கேப்டன்
கடைசி ஓவரில் இங்கிலாந்தை வெற்றி கொள்ள 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஹர்மன்பிரீத் அடித்த சிக்ஸ் இந்தியா வெற்றிபெற உதவியது. ஆல்ரவுண்டரான ஹர்மன்பிரீத் கவுர் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.