புதிய ஜோடி
2024ஆம் ஆண்டு டி20 உலககோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் படுத்தும்விதமாக முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் ராகுல், ரோகித் ஜோடி செயல்பாடு விமர்சனத்துக்கு ஆளான நிலையில் இந்த தொடரில் புதிய ஜோடி களமிறங்குகிறது.
புதிய அணி
இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இந்த தொடர் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் ஆர்ஸ்தீப், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர். சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய அத்தியாயம்
இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா எவ்வாறு கேப்டனாக செயல்படுகிறார், அவரது தலைமையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறதா என்பதை பிசிசிஐ உற்று கவனிக்க உள்ளது. இது இந்திய டி20 அணியின் புதிய அத்தியாயம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், வெல்லிங்டனில் டி20 போட்டிகளுக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
அறிமுக நிகழ்ச்சி
இதில் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கோப்பையை வாகனத்தில் எடுத்து வந்து, துறைமுகம் முன் போஸ் கொடுத்தனர். அப்போது, ஹர்திக் பாண்டியா தனது ஜெர்சியை சரி செய்யும் போது காற்று வேகமாக அடித்தது. அதில், கோப்பை வைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்தது. உடனே கோப்பையை கீழே விழாமல் பிடித்த வில்லியம்சன், இந்த கோப்பையை நானே வைத்து கொள்கிறேன் என்று எடுத்து கொண்டு ஓடினார். இதனை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.