திருப்பம்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு ஏற்ற களம் என்று எதிர்பார்த்த போது, முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. முன்னணி வீரர்கள் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழக்க ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 92 ரன்கள் எடுத்து அணியை காப்பாற்றினார்.
இலங்கையின் பரிதாபம்
இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி பும்ராவின் வேகத்தில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. 8 வீரர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேற மேத்யூவ்ஸ் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
அதிவேக அரைசதம்
143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 303 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள், ரிஷப் பண்ட் அதிவேக அரைசதம், ஸ்ரேயாஸ் ஐயர் 67 என விளாச 303 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து டிக்ளர் செய்தது. இதனால் 447 என்ற கடினமான இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது.
மீண்டும் மோசமான ஆட்டம்
3 நாட்கள் முழுவதுமாக உள்ளதால் இலங்கை அணி தடுப்பாட்டம் மட்டுமே ஆடியாவது டிரா செய்திருக்கலாம். ஆனால் இலக்கை விரட்ட நினைத்து ஏமாற்றமே மிஞ்சியது. இந்த முறையும் 8 வீரர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களையே எடுக்க, கேப்டன் திமுத் கருணரத்னே 107 ரன்களும், குசல் மெண்டீஸ் 54 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்களும், அஸ்வின் 4 விக்கெட்களையும் எடுத்தனர். இதன் மூலம் 2 - 0 என இலங்கை அணியையும் வைட் வாஷ் செய்துள்ளது இந்திய அணி.