
மிதாலி ராஜ் இல்லாமல் ஆடிய இந்தியா
மகளிர் உலக டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா ஆடிய போட்டி முக்கியமற்ற போட்டியாகவே இருந்தது. காரணம், இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இந்திய அணியில் சென்ற போட்டியில் காயம் ஏற்பட்டதால் மிதாலி ராஜ் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக அனுஜா பாட்டில் களம் இறங்கினார். மற்றொரு மாற்றமாக மான்சி ஜோஷிக்கு பதில் அருந்ததி ரெட்டி அணியில் இடம் பெற்றார்.

ஸ்மிருதி மந்தனா அரைசதம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு வீராங்கனைகள் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஸ்மிருதி மந்தனா 55 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அணியின் ரன்கள் உயர உதவினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பொறுப்பாக ஆடி 43 ரன்கள் அடித்தார். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா எளிதாக வீழ்ந்தது
அடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை துரத்த வந்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் பேட்டிங் இந்திய பந்துவீச்சின் முன் எடுபடவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தது ஆஸ்திரேலியா. 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா வெற்றி பெற்றது
அந்த அணியின் பெர்ரி 39, கார்டனர் 20 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் 20 ரன்களை தாண்டவில்லை. இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அனுஜா பாட்டில் 3, தீப்தி சர்மா 2, பூனம் யாதவ் 2, ராதா யாதவ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்திய அணி நவம்பர் 23 அன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஆடவுள்ளது.


Click it and Unblock the Notifications











