டெல்லி: ராகுல் திராவிடின் தலைமையில் பத்து வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் 1-0 என்று டெஸ்ட் தொடரை வென்றது தான், இந்திய அணியின் மிகப்பெரிய சாதனை. அதன் பின்பு தோனியின் தலைமையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து என டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கெதிராக வெளிநாட்டில் தொடர்களை வெல்ல முடியாமல் போனதற்கு பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், அந்நிய மண்ணில் சிறந்து விளங்கினால் மட்டுமே உலக அளவில் தலை சிறந்த அணியாக விளங்க முடியும்.
பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு பிறகு, தரமான ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கி கோஹ்லியின் தலைமையில் இந்த வருட ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்கா சென்ற அணியின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் ஆடுகளத்திற்க்கேற்ப வீரர்களை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளில் மீண்டும் தோல்வியையே தழுவியது இந்திய அணி. ஒரே ஆறுதல் என்னவென்றால் மிகவும் கடினமாக போராடித் தொடரை இழந்தார்கள்.
இம்முறை இங்கிலாந்து தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக, இஷாந்த் சர்மா, புஜாரா, கோஹ்லி ஆகியோர் இங்கிலாந்தின் கவுண்ட்டி தொடரில் பங்கேற்கவுள்ளனர். மேலும் புவனேஷ் குமார்,, ஷமி, உமேஷ் யாதவ். பும்ரா என அதிரடி பந்துவீச்சாளர்களும் இருப்பதால் நம்பிக்கை அதிகரிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக முதலில் டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் பங்கேற்றப் பின்னரே டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதால் பெரிதாக ஏதும் காயங்கள் இல்லாவிடில் இந்த இந்திய அணியை ஜெயிப்பது இங்கிலாந்திற்கு பெரும் தலைவலியாக இருப்பது உறுதி.
7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி எப்படி சச்சின், திராவிட், லக்ஷ்மன் என திறமையான வீரர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் தத்தமது இறுதி தொடரில் பங்கேற்றதால் பெரிதும் சோபிக்க முடியாமல் போனது நியாபகம் இருக்கலாம் (டிராவிட் தவிர). இங்கிலாந்திற்கும் கிட்டத்தட்ட அதே பிரச்சனை இப்போது இருக்கிறது. அலிஸ்டர் குக், பிராட், ஆண்டர்சன் என எல்லோரும் ஓய்வை நோக்கி நகரும் வேளையில் இந்தியா சுற்றுப்பயணம் ஆரம்பிக்கிறது. முதல் போட்டியிலேயே சரியாக திட்டமிட்டால் தொடரை வெல்வது உறுதி.
ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான வீரர்களின் பட்டியலை சற்று முன் பிசிசிஐ அறிவித்துள்ளது. மனீஷ் பாண்டே மற்றும் கேதார் ஜாதவ் நீங்கலாக, தவான், கோஹ்லி, ரோஹித், கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ராயுடு, தோனி, சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஹார்திக், கவுல், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஷ் குமார், மற்றும் குலதீப் யாதவ்.
தினேஷ் கார்த்திக் மற்றும் ராயுடு தங்களை நிரூபித்துக்கொண்டு உலககோப்பைக்கு அடுத்த வருடம் செல்லும் அணியில் தங்களை இணைத்துக்கொள்ள இது அற்புதமான தருணம். மேலும் ஹார்திக் பாண்டியவை பெரிதும் நம்பும் இந்திய அணிக்கு இத்தொடர் நல்ல ஆரம்பமாக இருக்கும். ஐபிஎல் முடிந்தவுடன் ஒரு மாதத்தில் மற்றொரு விருந்துக்கு ரசிகர்கள் தயார் ஆகலாம்.
இப்படைத் தோற்கின்...