இஸ்லாமாபாத்: இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பலாக இருப்பதால், பாகிஸ்தான் எளிதாக வெல்லலாம் என்று வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.
உலக கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் பரபரப்பான ஆட்டம் ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் ஞாயிறன்று நடக்கிறது. போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக வெற்றியை ருசி பார்க்க, பாகிஸ்தான் முடிவு செய்திருக்கிறது.
அதற்காக பலவித வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு முன்னாள் கேப்டனும், ஸ்விங் பவுலிங் ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் பல டெக்னிக்குகளை கூறி உள்ளார். அவர் கூறியதாவது:
இந்தியாவிடம் வலுவான டாப்ஆர்டர் பேட்டிங் இருக்கிறது. ரோகித், கோலி, தவான் இல்லாவிட்டாலும் ராகுல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால், அணியின் நடுவரிசையில் சிறந்த பேட்ஸ்மென் யாரும் இல்லை. இந்த விஷயத்தை பாகிஸ்தான் கவனிக்க வேண்டும்.
உங்களின் டார்கெட் அவர்கள் தான். அனுபவம் மிக்க வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீரை தொடக்கத்தில் பவுலிங்குக்கு பயன்படுத்தக்கூடாது. மிடில் ஆர்டரை காலி செய்யும் வகையில் பந்துவீச வைக்க வேண்டும்.
பாபர் ஆசம் சிறந்த பேட்ஸ்மேன். அவரை கோலியுடன் ஒப்பிட்டு நெருக்கடி கொடுக்க வேண்டாம். அவரை சுதந்திரமாக விளையாட அனுமதியுங்கள். இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது இல்லை?
கூக்கபரா பந்துகள் ஸ்விங் செய்ய ஏற்றவை அல்ல. டியூக் பந்துகள்தான் ஸ்விங் செய்ய வசதியாக இருக்கும். ஆனால், ஐசிசி டியூக்வகை பந்துகளை தேர்வு செய்வதில்லை. 1999ம் ஆண்டு உலக கோப்பையில் இந்த பந்துகள் தான் பயன்படுத்தப்பட்டன என்றார்.