மிடில் ஆர்டரில் ராகுல்
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் களமிறங்கினார். அதிலும் ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்படாமல், கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கியது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வங்கதேச அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா 27, தவான் 7, கோலி 9 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
காப்பாற்றிய கேஎல் ராகுல்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க போராட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், தனிஒருவனாக போராடியா ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் 11வது அரைசதத்தை கடந்தார். 9வது விக்கெட் வரை போராடிய ராகுல் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. வங்கதேச அணிக்கு கவுரவமான இலக்கை நிர்ணயிக்க கேஎல் ராகுலின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
ராகுலின் சாதனை
இதுவரை கேஎல் ராகுல் 5வது வீரராக களமிறங்கிய 11 ஒருநாள் போட்டிகளில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுதி ஓவர்களின் போது தேவைக்கேற்ப அதிரடியாக ரன்களை சேர்த்து வருகிறார். இதனால் கேஎல் ராகுலை தொடக்க வீரராக களமிறக்காமல் மிடில் ஆர்டர் வீரராக பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரசிகர்கள் பாராட்டு
டி20 உலகக்கோப்பையில் மோசமான ஃபார்மில் இருந்த கேஎல் ராகுல், மீண்டும் ஃபார்மிற்கு வந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஃபார்மை கேஎல் ராகுல் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றும், ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடும் போது ஃபினிஷிங் செய்வதற்கும் எந்த பிரச்சினையும் வராது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.