அலூர்: இந்திய பெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை போட்டியில் தீப்தி சர்மா தலைமையிலான இந்தியா ரெட் அணியை வென்றது மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய புளு அணி.
இந்திய பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் டி-20 சாலஞ்சர்ஸ் கோப்பை போட்டி கர்நாடக மாநிலம் அலூரில் நடந்து வருகிறது. இதில் இநதியா ரெட், இந்தியா புளு, இந்தியா கிரீன் என மூன்று அணிகள் பங்கேற்கின்றன.

14ம் தேதி துவங்கிய இந்த சாலஞ்சர்ஸ் கோப்பையின் முதல் ஆட்டத்தில் புளு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ரெட் வென்றது. அடுத்து நடந்த ஆட்டத்தில் கிரீன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் புளு அணியை வென்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் ரெட் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் கிரீன் அணியை வென்றது.
இன்று நடந்த ஆட்டத்தில் ரெட் மற்றும் புளு அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ரெட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. பூனம் ராவத் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். புளு அணியின் மானசி ஜோஷி, அனுஜா படேல், தயாளன் ஹேமலதா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய புளு அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து வென்றது. வெள்ளசாமி வனிதா 45 ரன்களில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் புளு அணி வென்றது. தற்போதைய நிலவரப்படி ரெட் அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. புளு மற்றும் கிரீன் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன.