டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை கோச் பொறுப்பில் இருந்து துஷார் அரோத் விலகினார். சில வீராங்கனைகளுடன் ஏற்பட்ட கருத்து மோதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை கோச் பொறுப்பில் பரோடாவைச் சேர்ந்த முன்னாள் ரஞ்சி வீரர் துஷார் அரோத், 2017 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே 2008 முதல் 2012 வரை இந்திய மகளிர் அணிக்கு அவர் பயிற்சி அளித்திருந்தார். உலகக் கோப்பை வரையில் அவர் தலைமை கோச் பொறுப்பில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அவருடைய பயிற்சியில், 2017ல் நடந்த உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி பைனல் வரை நுழைந்து அசத்தியது. அதையடுத்து 2 ஆண்டுகளுக்கு அவருடைய ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. தொடர்ந்து 6 முறை ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி இந்த முறை கோப்பையை தவற விட்டது.
அணியில் உள்ள சில வீராங்கனைகளுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலானதாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் கோச் பொறுப்பில் இருந்து துஷார் விலகியுள்ளார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறினாலும், வீராங்கனைகளுடன் ஏற்பட்ட மோதலே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மகளிர் உலக டி-20 போட்டிகள் துவங்க சில மாதங்களே உள்ள நிலையில், கோச் பொறுப்பில் இருந்து துஷார் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.