டி20 உலகக்கோப்பை தொடர்
2020 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று நடைபெறும் படி போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்தன.
குரூப் சுற்று வெற்றிகள்
ஏ, பி என இரு பிரிவுகளாக நடந்த குரூப் சுற்றில் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றது. இதே பிரிவில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகளையும் வீழ்த்தி இருந்தது இந்தியா.
இந்தியா முதல் இடம்
குரூப் ஏ பிரிவில் இந்தியா முதல் இடமும், ஆஸ்திரேலியா இரண்டாம் இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா முதல் இடமும், இங்கிலாந்து இரண்டாம் இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
இந்தியா - இங்கிலாந்து போட்டி
இந்தியா - இங்கிலாந்து அரையிறுதிப் போட்டி சிட்னி நகரில் நடைபெற இருந்தது. அங்கே போட்டி நாள் அன்று கடும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் கூறின. அதே இடத்தில் தான் மற்றொரு அரையிறுதிப் போட்டியும் நடப்பதாக இருந்தது.
ரிசர்வ் நாள் இல்லை
அதனால், போட்டியை நடத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஐசிசியிடம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ரிசர்வ் நாளில் (அடுத்த நாள்) போட்டியை நடத்த அனுமதி கேட்டது. முன்னதாக ரிசர்வ் நாள் இல்லாத நிலையில், சிறப்பு அனுமதி கேட்டது.
போட்டி தடைபட்டது
ஆனால், ஐசிசி ரிசர்வ் நாள் அளிக்க மறுத்து விட்டது. இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து போட்டி நடக்க இருந்த நாளின் காலை முழுவதும் பல மணி நேரம் மழை பொழிந்ததால் போட்டி நீண்ட நேரம் துவங்கவில்லை.
போட்டி கைவிடப்பட்டது
இனி போட்டி நடத்த முடியாது என்ற நிலையில் அம்பயர்கள் போட்டியை கை விடுவதாக அறிவித்தனர். டாஸ் போடாத நிலையில், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. 2020 டி20 உலகக்கோப்பை விதிப்படி குரூப் சுற்றில் முதல் இடம் பிடித்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
வரலாறு படைத்த இந்தியா
அதன்படி, குரூப் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்திய மகளிர் அணி தன் முதல் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. இங்கிலாந்து அணி குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு போட்டி
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அந்தப் போட்டியும் சிட்னி நகரில் தான் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியும் மழையால் கைவிடப்படும் என்றே தெரிகிறது. அப்படி நடந்தால் தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.