இன்சமாம் விளாசல்
இந்நிலையில், இன்சமாம்-உல்-ஹக், பாகிஸ்தான் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆன்டர்சனை விட்டு விளாசினார். அவர் கூறியது: ஆன்டர்சன் இந்தியாவில் அதிக விக்கெட்டுகளை எடுத்து நான் பார்த்ததே கிடையாது. ஆனால் அவரோ கோஹ்லியின் பேட்டிங் திறமை பற்றி குறை கூறுவது எனக்கு வியப்பாகதான் உள்ளது.
சர்டிபிகேட் கொடுப்பார்களா
இங்கிலாந்தில் ரன் குவித்தால்தான் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்று சர்டிபிகேட் தரப்படும் என்ற ரீதியில் ஆன்டர்சன் பேசியுள்ளார் போலும். அப்படியானால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஏன் ஆசிய நாடுகளின் பிட்சுகளில் தடுமாறுகிறார்கள்? அப்படியானால், அவர்கள் மோசமான பேட்ஸ்மேன்கள், அவை மோசமான அணிகள் என்று நாமும் எடுத்துக்கொள்ளலாமா?
சிறந்த வீரர்
என்னை பொறுத்தளவில் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் ரன் எடுப்பவரே சிறந்த வீரர். 150 ரன்கள் குவித்தாலும் அணியின் வெற்றிக்கு உதவாவிட்டால் அந்த பேட்ஸ்மேன் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. 80 ரன்களே எடுத்தாலும், அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்பவனே சிறந்த வீரன். விராட் கோஹ்லி அதுபோன்ற ஒரு சுத்த வீரன்.
ஆசிய அணிகள்
விராட் கோஹ்லியிடம் ரன் குவிக்க வேண்டும் என்ற ஒரு வேட்கை உள்ளது. அவர் ஒரு தரமான வீரர் என்று என்னால் சொல்ல முடியும். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தங்கள் வீரர்களை விட்டுத்தருவதில்லை. ஆனால் ஆசிய நாட்டு கிரிக்கெட் அணிகள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சிறப்பாக ஆடாவிட்டாலும் அணி நிர்வாகம் அவர்களை கைவிட்டுவிடுகிறது. இலங்கையில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தோற்று திரும்பியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் வைத்து இங்கிலாந்தை பாகிஸ்தான் 3-0 என்று தோற்கடித்துள்ளது.
சேவாக் என்றால் பயம்
நான் பாகிஸ்தான் கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் வீரேந்திர சேவாக்தான் என்னை பொறுத்தளவில் அச்சுறுத்தும் பேட்ஸ்மேன். அவர் 80 ரன்தான் எடுத்தால் கூட அந்த அணி 300 ரன்களை கடந்துவிட வாய்ப்புண்டு. சேவாக் எவ்வளவு அதிக நேரம் கிரீசில் நிற்கிறாரோ அவ்வளவு அதிகம், பவுலர்கள் மனதளவில் சோர்ந்துவிடுவார்கள்.
இந்தியா-பாக் போட்டி
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இரு அணிகளுக்குமே இந்த பிரச்சினையால் பின்னடைவு. அதிலும் பாகிஸ்தானுக்கு அதிக பாதிப்பு. பாகிஸ்தானுக்கு பல சர்வதேச நாடுகள் விளையாட வருவதில்லை. எனவே பாகிஸ்தானின் இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அரசாங்க அளவில் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர் என்பது ஆஷஷ் தொடரை விட பெரியது. இவ்வாறு இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்தார்