'தல' இருக்கும்போது எதுக்கு கவலை.. ரெய்னாவின் கோப்பை நம்பிக்கை!
கொல்கத்தா: கேப்டன் டோணியின் தலை சிறந்த தலைமை இருக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 2 முறை கோப்பையை வென்றுள்ள அணியான சென்னை சூப்பர் கிங்ஸும், ஒருமுறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், முதலாவது குவாலிபயர் போட்டியில், மும்பையிடம் தோல்வியைச் சந்தித்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் 2வது குவாலிபயர் ரவுண்டுக்குப் போய் அங்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி தற்போது இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. எணவே இன்று மும்பையை வீழ்த்தி கோப்பையை அது கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
இந்தப் போட்டி குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், டோணி மிகவம் சிறப்பான கேப்டன். தொடர்ச்சியாக நல்ல தலைமையை வழங்கி வருகிறார். அதுதான் எங்களை ஆறு முறை இறுதிப் போட்டிக்கு அழைத்து வர முக்கியக் காரணம்.

நிச்சயம் வெல்வோம்
8வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் நாங்கள் முன்னேறியுள்ளோம். நிச்சயம் இதில் வெற்றி அடைவோம். கோப்பையைக் கைப்பற்றுவோம். டோணியின் தலைமை அதற்கு உதவும்.

மும்பையை பழி தீர்ப்போம்
இதே மைதானத்தில்தான் 2013 இறுதிப் போட்டியில் நாங்கள் மும்பை இந்தியன்ஸிடம் தோற்று பட்டத்தைப் பறி கொடுத்தோம். அதை நாங்கள் மறக்கவில்லை. நிச்சயம் இந்த முறை அதை சரி செய்து விடுவோம்.

10 ஓவர்களுக்குப் பிறகு கவனம் தேவை
ஈடன் கார்டன் பிட்ச்சில் பத்து ஓவர்களுக்குப் பிறகு விக்கெட் ஸ்லோவாகி விடும். எனவே நல்ல பார்ட்னர்ஷிப் போடுவதும், பெரிய டோட்டலை எட்டுவதும் முக்கியமானது. குறிப்பாக முன்னணி வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்.

டோணி, பிராவோ கலக்க வேண்டும்
குறிப்பாக டோணியும், பிராவோவும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். அவர்கள் சிறப்பாக ஆடி விட்டால் பிரச்சினை இல்லை. மேலும் அவர்கள் அதிரடியாகி ஆடி விட்டால், சென்னையின் ஸ்கோரை சேஸ் செய்பவர்கள் தடுமாறுவார்கள்.

பஜ்ஜி உஷார்!
ஹர்பஜன் சிங் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். எனவே 8 முதல் 12 ஓவர் வரை சற்று கவனமாக இருக்க வேண்டும். பதட்டப்பட்டால் அவுட்டாகி விடுவோம். டி20 கிரிக்கெட் என்பது மிகவும் குறுகிய அவகாசம் கொண்டது. இங்கு பிளான் பிக்கு இடமில்லை. ஒரே முடிவுதான், அதைத் தெளிவாக அமலாக்க வேண்டும்.

சூப்பர் பவுலர்கள்
அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆசிஷ் நெஹ்ரா பிரமாதமாக ஆடுகிறார். மோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசுகின்றனர். எல்லோரும் விக்கெட் வீழ்த்துகின்றனர் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications