புனே: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் டிம் சவுத்தி நேற்றைய போட்டியில் பிடிக்க உதவிய கேட்ச், உலக கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த கேட்சுகளில் ஒன்றாக மீடியாக்களால் புகழப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த163 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பயணித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்தில் சேவாக் விக்கெட் வீழ்ச்சியால் சறுக்கல் ஏற்பட்டாலும், முரளி விஜய் அடித்த 37 ரன்கள் சற்று நம்பிக்கை தந்தன.
Incredible Catch :) We won @rajasthanroyals #KXIPvRR pic.twitter.com/hPReS5ZsED
— Manan Mathur (@Manan1M) April 10, 2015
இதனிடையே மிடில் ஆர்டரில் கேப்டன் ஜார்ஜ் பெய்லியும், சிறப்பாக சேஸிங்கை தொடங்கினார். எனவே பஞ்சாப் அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே, பெய்லி பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் பெய்லி 18 பந்துகளில், 24 ரன்கள் எடுத்திருந்தபோது, அவர் அவுட் ஆனதுதான் மேட்சை திருப்பிபோட்டது.
இத்தனைக்கும், பெய்லி சாமானியமாக அவுட் ஆகவில்லை, கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த கேட்சுகளில் ஒன்றால் அவர் அவுட் செய்யப்பட்டார்.
ஆம்..பெய்லி பந்தை லாங் ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கியடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு ஓடிவந்த டிம் சவுத்தி, அந்த பந்தை லாவகமாக தட்டிவிட்டார். பந்து தட்டிவிடப்பட்டு அந்தரத்தில் நின்றபோது தனது வலது காலை பவுண்டரி எல்லைக்கு அப்பால் வைத்தார். ஆனால், தட்டிவிடப்பட்ட பந்தை, மற்றொரு வீரரான கருண் நாயர், ஒற்றைக் கையால், பிடித்து அசத்தினார்.
இத்தனைக்கும், கருண் நாயர் அந்த பந்து தன்னிடம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் திடுக்கிட்ட நாயர், சுதாரித்துக் கொண்டு ஒரு கையால் அந்த கேட்சை பிடித்தார். பவுண்டரி எல்லையில் டிம் சவுத்தி சமயோஜிதமாக பந்தை தட்டியதும், அதேபோல கருண் நாயரும் சமயோஜிதமாக பந்தை பிடித்ததும் அருமையான காட்சிகளாக இருந்தன.
இந்த கேட்சை உலக மீடியாக்கள், சிறப்பான கேட்சுகளில் ஒன்றாக வர்ணிக்கின்றன. நியூசிலாந்து நாட்டு ஊடகங்களும், டிம்சவுத்தியை பாராட்டுகின்றன. கேட்சுகள்தான், மேட்சை வின் செய்ய வைக்கின்றன என்ற கிரிக்கெட் மொழிக்கு ஏற்ப அமைந்திருந்தது அந்த கேட்ச்.