2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை உள்ள காலகட்டத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த சீசன் வெளிநாட்டில் நடைபெற உள்ளது.
முதற்கட்ட ஐபிஎல் பணிகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2014ஆம் ஆண்டு 20 ஐபிஎல் போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டன. அதே நாட்டில் 2020 ஐபிஎல் தொடரையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இன்னும் போட்டி அட்டவணை வெளியாகவில்லை. ஐபிஎல் அணிகள், ஒளிபரப்பாளர்கள் தங்கள் முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளனர்.
கிரிக்கெட் பயிற்சி
கிரிக்கெட் வீரர்கள் பலரும் கடந்த நான்கு, ஐந்து மாதமாக போதிய கிரிக்கெட் பயிற்சி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன் அந்த வீரர்கள் அனைவருக்கும் ஒரு மாத கால பயிற்சி அளிக்க அணிகள் முடிவு செய்துள்ளன.
சிஎஸ்கே திட்டம்
ஆகஸ்ட் 20க்கு பின் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு நாட்டிற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதற்கும் முன்னதாக செல்ல முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 8இல் துபாய் கிளம்ப சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக அந்த அணி அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
தனி விமானம்
பின்னர் ஒரு வார தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் பயிற்சி செய்ய துவங்கும் வகையில் சிஎஸ்கே நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஐக்கிய அரபு நாட்டிற்கு விமான சேவை இல்லை என்பதால் சிஎஸ்கே அணி தனி விமானத்தில் செல்ல உள்ளது.
பாதுகாப்பான முடிவு
மேலும், தனி விமானம் மூலம் செல்வது இந்த நேரத்தில் பாதுகாப்பான முடிவு என்பதாலும் அனைத்து அணிகளுமே தனி விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், பிசிசிஐ இதுவரை போட்டி அட்டவணை குறித்து எதுவும் கூறவில்லை என்பதால் ஐபிஎல் அணிகள் திணறி வருகின்றன.
தோனி?
சிஎஸ்கே விரைவில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ள நிலையில், ரசிகர்கள் தோனியும் முதலிலேயே செல்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்களின் படி தோனியுடன் அனைத்து இந்திய வீரர்களும் ஒன்றாகவே செல்ல உள்ளதாக தெரிகிறது.
மூத்த வீரர்கள்
வெளிநாட்டு வீரர்களும் துவக்கத்தில் இருந்தே பயிற்சியில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. மற்ற ஐபிஎல் அணிகள் ஆகஸ்ட் 15 முதல் தான் ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேர்வார்கள் என கூறப்படுகிறது. மூத்த வீரர்களை அதிகம் கொண்ட சிஎஸ்கே அணி அதன் காரணமாகவே கூடுதல் பயிற்சி செய்ய திட்டமிட்டுள்ளது.