14 நாட்கள் குவாரன்டைன்
இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதற்காக கடந்த மாதத்தில் யூஏஇ சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் ஊழியர்கள் 11 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்.
4ம் தேதி முதல் பயிற்சி
இதனால் சிஎஸ்கேவின் பயிற்சி போட்டிகள் கேள்விக்குறியான நிலையில், மற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் கடந்த 4ம் தேதி முதல் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தீபக் சஹர் உள்ளிட்டவர்கள் தங்களது குவாரன்டைனை முடித்துள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தீபக் சஹருக்கு கொரோனா நெகட்டிவ்
அடுத்தடுத்து எடுக்கப்பட்ட இரண்டு கொரோனா பரிசோதனைகளில் தீபக் சஹருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்ததையடுத்து தற்போது அவர் மீண்டும் அணியின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளதாக சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளும் சஹரின் உற்சாகமான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டு வந்த சிஎஸ்கே
இதனிடையே கெய்க்வாடின் குவாரன்டைன் காலம் வரும் 12ம் தேதியுடன் முடிவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 13 பேரின் கொரோனா பாதிப்பு மற்றும் அணியின் முக்கிய வீரர்கள் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங்கின் வெளியேற்றம் என அடுத்தடுத்த நெருக்கடிகளை சந்தித்த சிஎஸ்கே தற்போது அதிலிருந்து மீண்டுள்ளது. வரும் 19ம் தேதி முதல் போட்டியில் மும்பை இந்தியன்சை எதிர்கொள்ளவுள்ளது.