கடும் விதிமுறைகள்
2020 ஐபிஎல் தொடர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. பிசிசிஐ கடும் விதிமுறைகளை வகுத்து அனைத்து ஐபிஎல் அணிகளையும் அதை கடுமையாக பின்பற்றுமாறு கூறி உள்ளது.
13 பேருக்கு கொரோனா வைரஸ்
அப்படி கடுமையான விதிமுறைகளை வகுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஐபிஎல் தொடருக்கு சிக்கல் எழுந்தது. இன்னும் விதிகளை கடுமையாக பின்பற்ற வைப்பதுடன், அதை கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளது பிசிசிஐ.
குழப்பத்தில் பிசிசிஐ
அந்த விவகாரத்தாலும், அபுதாபி - துபாய் நகரங்களுக்கு இடையே உள்ள கொரோனா வைரஸ் விதிமுறை சிக்கல்களாலும் போட்டியை எந்த நகரங்களில், எப்படி நடத்துவது என்ற குழப்பத்தில் உள்ளது பிசிசிஐ. எனினும், போட்டி அட்டவணை செப்டம்பர் 4 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
ஐபிஎல் அணிகள் பயிற்சி
சிஎஸ்கே தவிர மற்ற ஐபிஎல் அணிகள் அனைத்தும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. செப்டம்பர் 19 முதல் துவங்க இருக்கும் நிலையில் அனைத்து ஐபிஎல் அணி வீரர்களுக்கும் மூன்று வாரம் மட்டுமே பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
மூன்று வார பயிற்சி போதாது
வெறும் மூன்று வார பயிற்சியுடன் ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என அனைத்து ஐபிஎல் அணிகளும் கருதுகின்றன. ஐபிஎல்-இல் ஆட உள்ள இந்திய வீரர்கள் கடந்த ஆறு மாதமாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை. அந்த நிலையில், அவர்களால் எப்படி ஐபிஎல் போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட முடியும் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
வீரர்களை தயார் செய்யும்
அதனால், அனைத்து ஐபிஎல் அணிகளும் பயிற்சிப் போட்டி வேண்டும் என பிசிசிஐ-யிடம் கேட்கத் துவங்கி உள்ளன. பயிற்சிப் போட்டிகள் முதல் போட்டிக்கு முன்பே வீரர்களை முழு அளவில் தயார் செய்யும் என ஒரு அணியின் நிர்வாகி கூறினார்.
சிறப்பாக ஆட உதவும்
ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் இது குறித்து வெளிப்படையக பேசாவிட்டாலும் பயிற்சிப் போட்டிகள் நடத்துவது, ஐபிஎல் தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆட உதவும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் தயார் ஆவார்கள்
மேலும், இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சியில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் பயிற்சிப் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ரசிகர்களையும் ஐபிஎல் பரபரப்புக்கு தயார் செய்ய முடியும் என கருதுவாகவும் கூறப்படுகிறது.