அசால்ட்டாக வெற்றி
கிரிக்கெட் உலகில் இன்றைய ஹாட் டாப்பிக்காக ரிஷப் பண்ட் மாறியுள்ளார். இதற்கு காரணம் இளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி அணி விளையாடியது தான். ஐபிஎல்-ல் முதல் முறையாக கேப்டன்சி செய்த பண்ட் - 13 ஆண்டுகளாக கேப்டனாக இருக்கும் எம்.எஸ்.தோனியை எதிர்கொண்டார். இந்த போட்டி குரு - சிஷ்யனுக்கு இடையேயானதாக பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி அசால்ட்டாக வெற்றி பெற்றது.
சூப்பர் கேப்டன்சி
முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் வந்த ரெய்னாவின் அரை சதம் மற்றும் மொயின் அலியின் அதிரடி ஆட்டம் சென்னையை மீட்டது. எனினும் அவர்களை சுலபமாக கட்டுப்படுத்திய டெல்லி அணி 7 விக்கெட்டுகளை சாய்த்து 188 ரன்களுக்கு சுருட்டியது.
குவியும் பாராட்டு
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ஆரம்பமே அமர்களமாக இருந்தது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் சுலபமாக வெற்றியை நோக்கி நகர்ந்தது. இதனால் அந்த அணி 18.4 ஓவர்களில் 190 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி கேப்டன் பண்ட், பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
முதல் போட்டி
ஐபிஎல் தொடரில் கடந்த 2 வருடங்களாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். அணியில் அஸ்வின், ஸ்மித் என பல அனுபவ வீரர்கள் உள்ள போதும் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
கேப்டன்
இந்நிலையில் தான் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே ரிஷப் பண்ட அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளார். மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் தோனியையே வீழ்த்தியுள்ளார் என ரிஷப் பண்ட்-க்கு பாராட்டுக்கள் வந்துக்கொண்டிருக்கிறது. எனவே இந்த தொடரில் இதே போன்று சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தால், ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பினாலும், ரிஷப் பண்ட்தான் டெல்லி அணிக்கு இனி நிரந்தர கேப்டனாக இருக்க வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் எழத்தொடங்கிவிட்டன.