ஏப்ரல் 9
இந்தாண்டுக்கான ஐபிஎல்-ல் சென்னை அணி வரும் ஏப்.10ம் தேதி டெல்லியுடன் தனது முதல் போட்டியை ஆடவுள்ளது. கடந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி கடந்த சீசனில் ப்ளே ஆஃப்-க்கு செல்லாமல் வெளியேறியது. எனவே இந்தாண்டு மீண்டு வரவேண்டும் என தீவிர பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புது வீரர்கள்
கடந்தாண்டு சென்னை அணியில் இருந்த பந்துவீச்சு பிரச்னையை சரிசெய்ய இந்தாண்டு ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் வாங்கப்பட்டனர். இதில் ரூ.7 கோடிக்கு வாங்கப்பட்ட மொயின் அலி கண்டிப்பாக ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கென தோனி தனி திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
எம்.எஸ்.தோனி
இந்நிலையில் தனது புது அணி குறித்து பேசியுள்ள மொயின் அலி, நான் தோனியின் கீழ் விளையாடிய வீரர்களிடம் பேசிய போது, அவர்கள் எவ்வாறு தோனியின் மூலம் தங்களது ஆட்டத்தை மெறுகேற்றினர் என தெரியவந்தது. ஏதோ ஒன்று ஒவ்வொரு வீரரும் தோனி கேப்டன்சியின் கீழ் ஆட வேண்டும் என ஆசைப்பட வைக்கிறது. அதனை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. அதுதான் அவர்களுக்கு தோனி வழங்கியிருக்கும் நம்பிக்கைக்கு சான்று என தெரிவித்தார்.
புகழராம்
மேலும் பேசிய அவர், மற்ற அணிகளில் இருந்து சென்னை அணி கட்டமைப்பில் தான் வேறுபடுகிறது. அங்கு இருக்கும்போது எதார்த்தத்தை உணர முடிகிறது. அந்த அணி எந்த அழுத்தமும் தராமல் மிக பொறுமையாக வீரர்களை கையாள்கிறது. வீரர்களுக்கு எந்தவித அழுத்தமும் தராத கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் இருப்பது மிக முக்கியம். அதிர்ஷ்டவசமாக சென்னை அணியில் அது எங்களுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.