பிசிசிஐ சலுகை
இதனால் தற்போது 2 புதிய அணிகள் தங்களது பணிகளை தொடங்கிவிட்டன. அதாவது ஐபிஎல் தொடரில் புதிதாக இணையவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள், மெகா ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ சலுகை கொடுத்திருந்தது. அதில் 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர் என்ற முறையில் ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும்.
புது அணிகள் நடவடிக்கை
அதன்படி நேற்று பழைய அணிகளின் அறிவிப்புகள் வெளியாகிவிட்டதால் இன்று முதல் புதிய அணிகள் வீரர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்நிலையில் புதிய அணிகளுக்கும் முதற்கட்ட வீரர்கள் தேர்வில் எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்ற நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா ரூ.90 கோடி வரை செலவு செய்துக்கொள்ளலாம். அதில் முதற்கட்ட தேர்வில் புதிய அணிகள் ரூ.33 கோடி செலவழித்துக் கொள்ளலாம் எனக்கூறப்பட்டு வருகிறது.
எவ்வளவு தொகை
அதாவது முதன்மை தேர்வாக இருக்கும் வீரருக்கு ரூ. 15 கோடி, 2வது தேர்வு வீரருக்கு ரூ. 12 கோடி மற்றும் 3வது தேர்வுக்கு ரூ. 7 கோடியும் ஊதியமாக நிர்ணயித்துக்கொள்ளலாம். இந்த 33 கோடி ரூபாயில் அணிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் கூட ஊதியத்தை வழங்கிக்கொள்ளும். அதன்படி பார்த்தால் லக்னோ அணிக்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.
லக்னோ அணி திட்டம்
பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த கே.எல்.ராகுல் ரூ.16 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டிருப்பார். ஆனால் லக்னோ அணி ரூ.20 கோடி தர முன்வந்ததால் அங்கிருந்து ராகுல் வெளியேறினார். இதே போல ஐதராபாத் அணி வீரர் ரஷித் கானுக்கு ரூ.16 கோடி ஊதியமாக கொடுப்பதாக கூறியுள்ளதால் அவரும் தனது அணியில் இருந்து வெளியேறி வந்துவிட்டார்.
புதிய சிக்கல்
கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கானுக்கு வழங்கப்படுவதாக கூறிய தொகையே மொத்தம் ரூ.36 கோடியாக உள்ளது. எனவே இருவரில் யாரேனும் ஒருவரின் ஊதியத்தை குறைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் யாரேனும் ஒருவரை ஏலத்தில் விட்டு வென்று காட்ட வேண்டும். ராகுல் மற்றும் ரஷித் கான் என இருவரில் யாரை மெகா ஏலத்தில் விட்டாலும், அவர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு வரும் என்பதால் லக்னோ அணிக்கு தான் அதிக செலவுகள் கூட வாய்ப்புள்ளது. இதனால் தற்போது அந்த அணி குழப்பத்தில் உள்ளது. இதே நிலைமை தான் அகமதாபாத் அணிக்கும் உள்ளது. அந்த அணி ஹர்திக் பாண்ட்யா மற்றும் டேவிட் வார்னருக்கு குறி வைத்துள்ளது.