7-வது ஐபிஎல் கிரிக்கெட்: ஷேவாக்கை கழற்றி விட்டது டெல்லி அணி
டெல்லி: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டது. இதன் மூலம் ஷேவாக் முதல் முறையாக ஏலத்திற்கு வருகிறார்.
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12- ந் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகின்றனர்..
அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 5 வீரர்களை தொடர்ந்து தங்கள் அணிகளில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும், அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி வீதம் சம்பளமாக ஒதுக்க வேண்டும் என்றும், சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் தக்க வைக்கப்பட்டால் அவருக்கு ரூ.4 கோடி ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

நேற்று கடைசிநாள்
எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுகிறார்கள் என்ற பட்டியலை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாளாகும். இதன்படி 8 அணி நிர்வாகங்களும் அந்த விவரங்களை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அதிரடி
டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிரடியாக, எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளது.

ஷேவாக் பார்மில் இல்லை
டெல்லி அணியின் உள்ளூர் நாயகன் 35 வயதான ஷேவாக் பார்மில் இல்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் 13 இன்னிங்சில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஓராண்டுக்கு மேலாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதால் அவரை வைத்துக் கொள்ள டெல்லி அணிக்கு விருப்பம் இல்லை. இதனால் அவரை கழற்றிவிட்டது டெல்லி.

ஏலத்துக்கு வரும் ஷேவாக்
முதல் மூன்று சீசனில் முத்திரை வீரர் அந்தஸ்துடன் அதிரடி காட்டிய ஷேவாக், அடுத்த மூன்று தொடர்களிலும் அந்த அணியில் நீடித்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக ஷேவாக் ஏலம் மூலம் விற்கப்பட இருக்கிறார்.

யார்? யார்?
ஷேவாக்குடன் மஹேலா ஜெயவர்த்தனே, டேவிட் வார்னர், கெவின் பீட்டர்சன், உன்முக் சந்த் ஆகியோரும் ஏலத்திற்கு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications