சென்னை: ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட ஜீ தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூ100 கோடி நட்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐபிஎல்6வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டோணி. அந்த ஐபிஎல் போட்டியில் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார்.
இந்நிலையில் ஜீ தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றில் சென்னை அணி கேப்டன் டோணிக்கும் பிக்ஸிங்கில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இந்த செய்திக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேப்டன் டோணி தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக ரூ100 கோடி நட்ட ஈடு கோரியும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டோணி தொடர்பான செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. ஏற்கெனவே ஐபிஎல் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி முகுல் முத்கல் கமிட்டியின் அறிக்கை மீது வரும் 25-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.