ரணகளத்திலும்.. போட்டியைப் பார்க்க சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து சேர்ந்த ரசிகர்கள்!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக போராட்டம் நடத்துவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று சேப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மைதானத்துக்குள் வரத் துவங்கியுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகு ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுப்பப்படுகின்றனர்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. சென்னையில் இன்று இரவு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், டோணி தலைமையிலான சிஎஸ்கே விளையாட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்க உள்ளது.

இதனிடையில், காவிரி மேலாண்மை வாரியம் கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போட்டியை நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் அண்ணா சாலையே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
போராட்டங்கள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே நேரம் உள்ள நிலையில், ரசிகர்களும், மைதானத்துக்கு வரத் துவங்கியுள்ளனர். மைதானத்தை சுற்றியும், மைதானத்துக்குள்ளும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போட்டியின்போது, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், உள்ளே வரும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக சோதனை செய்தப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். செல்போன் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications