சிரிப்பு காட்டிய பாகிஸ்தான்
இப்படிப்பட்ட சூழல் இருக்கையில், ஐபிஎல் தொடரில் அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதை தடுக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, ஐபிஎல் தொடரில் நடத்துவது போல் பிஎஸ்எல் தொடருக்கும் ஏலம் நடத்தப்படும் என்று கூறினார். இதற்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் அணிக்கு தேர்வு செய்து வந்தனர். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, அணிகள் செலவு செய்யும் பணத்திற்கான உட்சபட்ச வரம்பையும் அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி எப்படி ஐபிஎல் -க்கு வீரர்கள் செல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றும் சவால் விடுத்துள்ளார்.
ஐபிஎல் vs பிஎஸ்எல் ஒப்பீடு
இந்நிலையில் இது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் என்ன செய்தாலும், ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் வருவதை தடுத்து நிறுத்தவே முடியாது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரருக்கு சாதாரணமாக கொடுக்கப்படும் ஊதியம் கூட, பிஎஸ்எல்-ல் தொடர் நாயகனுக்கு கொடுக்க முடியாது. இதே போல அணிகளின் பரிசுகளும் ஏணி வைத்தால் கூட எட்ட முடியாது என்பது போல உள்ளது.
வீரர்களின் ஊதிய விவரம்
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.90 கோடி செலவளிக்கலாம் என அனுமதிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் ஒட்டுமொத்தமாக ரூ. 561.5 கோடியாகும். ஒவ்வொரு அணியும் தலா 25 வீரர்கள் வீதம் 217 வீரர்களை வாங்கலாம். சராசரியாக ஒவ்வொரு வீரரும் தலா ரூ. 2.59 கோடி ஊதியம் பெறும் கணக்காகும். ஆனால் பாகிஸ்தான் தொடரின் சிறந்த வீரருக்கே வெறும் ரூ.1.27 கோடி தான் ஊதியம். ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக கே.எல்.ராகுலுக்கு ரூ. 17 கோடி ஊதியம் தரப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் தொடரில் அதே ரூ. 1.27 கோடி தான் அதிகபட்சம் ஆகும்.
சாம்பியனின் பரிசு
ஐபிஎல் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 20 கோடி பரிசு வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் தொடரில் ரூ.3.40 கோடி தான். அதாவது ஐபிஎல்-ஐ விட 5 மடங்கு குறைவான பணமாகும். உதாரணத்திற்கு ரஷித் கான் பிஎஸ்எல் தொடரில் ரூ. 1.27 கோடி தான் ஊதியம் வாங்கினார். ஆனால் அடுத்ததாக ஐபிஎல் -ல் ரூ. 15 கோடி வாங்கவுள்ளார் என்பது தான் சிறந்த உதாரணம்.
ரசிகர்கள் கிண்டல்
இப்படி வீரர்களுக்கு பல மடங்கு ஊதியத்தை வாரி வழங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து எந்தவொரு வீரரும் வெளியேற விரும்பமாட்டார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஏதோ பகல் கனவு கண்டுக்கொண்டே ஐபிஎல்-க்கு எதிராக வார்த்தைகளை விட்டு வருவதாக ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.