இராணி கோப்பை
கடந்த 2020ஆம் ஆண்டு சௌராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, அந்த ஆண்டு நடைபெறவிருந்த இராணி கோப்பை தற்போது நடைபெறுகிறது. இதே போன்று 2021 -2022 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற மத்திய பிரதேச அணி பங்கேற்கும் இராணி கோப்பை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொதப்பல் பேட்டிங்
இந்த நிலையில் ராஜ் கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இதர இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சௌராஷ்டிரா அணி வீரர்கள், இதர இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்விக் தேசாய், சிராக் ஆகியோர் டக் அவுட் ஆகினர்.
98 ரன்களில் அவுட்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 1 ரன், ஷேல்டன் ஜாக்சன் 2 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்குஅதிர்ச்சி அளித்தனர். இதனால் 52 ரன்கள் சேர்ப்பதற்குள் சௌராஷ்டிரா அணி 7 விக்கெட்களை இழந்தது.தர்மேந்திர சிங் ஜடேஜா அதிகபட்சமாக 28 ரன்கள் எடுக்க, சௌராஷ்டிரா அணி 98 ரன்களில் சுருண்டது. இதர இந்திய அணி வீரர் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
யார் இந்த முகேஷ் குமார்?
இதே போன்று குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 28 வயதான முககேஷ் குமார், கடந்த சில போட்டிகளாக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் தனது தடத்தை பதித்தார். இதனால் விரைவில் இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.