கெயிலை நம்பிய டீம்
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தளவில், கிறிஸ் கெயிலைத்தான் அந்த அணி பெரிதாக நம்பியுள்ளது. கெயில் சிறப்பாக பேட் செய்த போட்டியில்தான் வெஸ்ட் இண்டீஸ் அதிக ரன்களை குவித்துள்ளது இந்த டி20 தொடரில் கண்கூடு.
அடிக்கலைனா ஆப்கானும் வீழ்த்தும்
கெயில் ரன் அடிக்காத நிலையில், குட்டி அணியான ஆப்கானிஸ்தானுடன் கூட வெஸ்ட் இண்டீஸ் தோல்வியைத்தான் தழுவியது. சாமுவேல்ஸ், பிராவோ போன்றோரும் திடீரென அடித்து நொறுக்குவார்கள் என்றாலும், கிறிஸ் கெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டால் கட்டுப்படுத்துவது மிக கஷ்டம்.
பிரம்மாஸ்திரம் நம்மிடம்
அதேநேரம், கெயிலை வீழ்த்தும் பிரம்மாஸ்திரம் இந்தியாவிடம் உள்ளது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. கேப்டன் டோணி அந்த பிரம்மாஸ்திரத்தை முதல் ஓவரிலேயே கெயில் மீது ஏவுவார் என்ற எதிர்பார்ப்பும், ரசிகர்கள் பல்சை எகிறச் செய்துள்ளது.
பயப்படும் ஒரே பவுலர்
இந்தியாவிடமுள்ள அந்த பிரம்மாஸ்திரம் வேறு யாருமல்ல, சுழற்பந்து வீச்சின் ஜாம்பவானாக உருவெடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்தான். உலகிலேயே கெயில் பயப்படும் ஒரே பவுலர் என்றால் அது அஸ்வின்தான்.
முதல் ஓவரில் பிரம்மாஸ்திரம்
அஸ்வினை கண்டால் கெயிலுக்கு தொடை நடுங்கும் என்பதற்கு முந்தைய போட்டிகள் சிறந்த உதாரணம். இதை மனதில் வைத்து, கெயிலுக்கு எதிராக அஸ்வினை முதல் ஓவரிலேயே பந்து வீச டோணி அழைக்க வாய்ப்புள்ளது.
பலே சிக்கனம்
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் வீசிய 70 பந்துகளை கெயில் சந்தித்துள்ளார். அதில் 57 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. இதில் சிங்கிள் ரன் கூட எடுக்க முடியாத 'டாட் பால்கள்' 40.
6 வாட்டிதான் அடிச்சாரு
அஸ்வின் பந்து வீச்சில் கெயில் மொத்தம் 6 முறைதான் பவுண்டரி எல்லைக்கு வெளியே பந்துகளை விரட்ட முடிந்துள்ளது. இதில் 3 பவுண்டரிகள், மற்ற மூன்றும் சிக்சர்கள்.
பவர்-பிளேயிலும் கில்லி
கெயிலுக்கு அஸ்வின் வீசிய 70 பந்துகளில் 51 பந்துகள், பவர்-பிளே எனப்படும், குறைந்த ஃபீல்டர்களை மட்டுமே பவுண்டரி எல்லையில் நிறுத்த முடிகிற கால கட்டத்தில் வீசப்பட்டது. இப்படி ஒரு இக்கட்டுக்கு நடுவே அஸ்வின் பந்து வீசியிருந்தபோதிலும், கெயிலால் சோபிக்க முடியவில்லை.
நா.. நால்லாம் பயப்படலப்பா
அதேநேரம், அஸ்வின் பந்து வீச்சுக்கு நான் பயப்படவில்லை என்று கெயில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். எந்த பவுலராக இருந்தாலும், அதிக வலுவோடு அதை அடிக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.