உலகக்கோப்பை இறுதிப் போட்டி
2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. 50 ஓவர் முடிவில் இரு அணிகளும் சரி சமமான ரன்களை எடுத்தன. அந்தப் போட்டி டை ஆனது. அடுத்து நடந்த சூப்பர் ஓவரும் டை ஆனது.
பவுண்டரி விதி
அப்போது இருந்த விதிப்படி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 17 பவுண்டரி மட்டுமே அடித்து இருந்த நிலையில், 26 பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றது. உலகக்கோப்பையை தட்டிச் சென்றது.
ஏற்றுக் கொள்வது கடினம்
அதைப் பற்றி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், "அது ஏற்றுக் கொள்ள மிகவும் கடினமானது. அதே சமயம், போட்டியின் முடிவை எப்படி முடிவு செய்யப் போகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அது முன்பே அமலில் இருந்தது" என்றார்.
விதி மாற்றம்
ஐசிசியின் பவுண்டரி எண்ணிக்கை விதி கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், சமீபத்தில் அந்த விதி மாற்றப்பட்டு இனி போட்டியில் முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர்கள் நடத்தப்படும் என விதி மாற்றப்பட்டுள்ளது.
வியப்பு ஒன்றும் இல்லை
இது பற்றி பேசிய கேன் வில்லியம்சன், "இதில் உண்மையில் எந்த வியப்பும் இல்லை. யாரும் இது போன்ற நிகழ்வு நடக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அது நடந்தது" என்றார்.
இப்படி ஒரு போட்டி
"அது நான் பங்கேற்றதில் மிக அற்புதமான ஆட்டம், உண்மையில் போட்டி நிறைந்ததாக இருந்தது. அனைவரும் நூற்றுக்கணக்கான கிரிக்கெட் போட்டியில் ஆடி இருப்பார்கள். ஆனால், இப்படி ஒரு போட்டி முடிவு செய்யப்பட்டு இருக்காது" என்றார் வில்லியம்சன்.
கடும் பாதிப்பு
கேன் வில்லியம்சன் இன்னும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பது அவரது பேச்சில் இருந்தே தெரிகிறது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.