பெங்களூரு : கொரோனா வைரஸ் தாக்கத்தால் 30,000 பேர் சர்வதேச அளவில் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை தாண்டி தொடர்ந்து வருகிறது.
இந்தியாவிலும் 25 பேர் இதுவரை கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த மத்திய அரசு பிரம்ம பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நெருக்கடி காலகட்டத்தில், பல்வேறு பிரபலங்களும் நிறுவனங்களும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு கைகொடுத்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால், சர்வதேச அளவில் மக்கள் கடுமையான சூழ்நிலையில் உள்ளனர். அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த கொடூர வைரசிற்கு 30,000 பேர் சர்வதேச அளவில் உயிரிழந்துள்ளனர். 6.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரசின் கோரத் தாண்டவத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்களுக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பிரபலங்கள், நிறுவனங்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்றன.
பிரதமர் நிவாரண நிதிக்கு கடந்த சனிக்கிழமை பிசிசிஐ 51 கோடி ரூபாய் நிதியை அறிவித்துள்ளது. இதேபோல, பெங்கால் கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கமும் தங்களுடைய நிதியுதவியை அறிவித்துள்ளன. இந்நிலையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் பிரதமர் நிவாரண நிதி மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலிமைப்படுத்தும்வகையில் இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நெருக்கடி நேரத்தை உற்று கவனித்து வருவதாகவும், அரசுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அதை செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.